Friday, April 26, 2013

நிலநடுக்கத்திலிருந்து 800 பேரைக் காப்பாற்றிய முதியவரின் புகையிலைப்பை

ஒரு முதியவரின் புகையிலைப் பை சீனாவில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்திலிருந்து 800 பேரை காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த விவரம்: சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் கடந்த சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10,500 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

அதே சமயம், சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியூஜியாயிங் கிராமத்தைச் சேர்ந்த 800 பேர், முதியவர் ஒருவரின் புகையிலைப் பையால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லீ சியாங்கே என்ற அந்த 68 வயது முதியவர் புகையிலை போடும் பழக்கமுடையவர். அவர் தன்னுடைய புகையிலைப் பையை எப்போதும் தன்னுடைய கையில் கட்டியிருப்பது வழக்கம்.

சம்பவம் நிகழ்ந்த நாளில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அவருடைய கையில் இருந்த புகையிலைப் பை, இயற்கைக்கு மாறாக விநோதமாக அசைந்தாடியிருக்கிறது. அந்த அசைவினால் அவர் உடனே விழித்தெழுந்துள்ளார்.

உடனே அவருக்கு 2008-ஆம் ஆண்டு வெஞ்சுவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் நினைவுக்கு வந்துள்ளது. அப்போதும் அவர் வைத்திருந்த புகையிலைப் பை இயற்கைக்கு மாறாக அசைந்தாடியிருக்கிறது. அதையடுத்து கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது (அந்த நிலநடுக்கத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது).

அதை நினைவுகூர்ந்த லீ சியாங்கே, உடனே வீட்டை விட்டு வெளியேறி ""நிலநடுக்கம் ஏற்படப்போகிறது; உடனே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள்'' என கூச்சலிட்டவாறு அருகிலிருந்த வீட்டுக் கதவுகளைத் தட்டியுள்ளார்.

வெளியே வந்த கிராமத்தினர், மற்றவர்களையும் குரல் எழுப்பி எச்சரிக்க கிராமத்திலிருந்த 800 பேரும் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் குழுமியுள்ளனர். அடுத்த ஓரிரு நிமிடங்களில் கடும் நிலநடுக்கம் ஏற்பட, அங்குள்ள வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகின.

புகையிலைப் பை மூலம் தங்களை எச்சரித்து உயிரைக் காப்பாற்றிய லீ சியாங்கேவை கிராமத்தினர் ஆரத்தழுவி நன்றி தெரிவித்தனர். தற்போது அனைவரும் தற்காலிகக் கூடாரங்களில் தங்கியுள்ளனர். லீ சியாங்கேவின் புகழோடு, புகையிலைப் பையின் மகத்துவமும் சீனாவின் இதர பகுதிகளில் பரவத் தொடங்கியுள்ளது.                                                                                                              

நன்றி ள்- தினமணி, 26-04-2013                                                                                             

0 comments:

Post a Comment

Kindly post a comment.