Wednesday, April 3, 2013

50 ஆண்டுகளுக்குப்பின்னர் மியான்மரில் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளியீடு !


    50 ஆண்டுகளுக்கு பின்னர் பத்திரிகை சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மியான்மரின் யாங்கூன் நகரில் திங்கள்கிழமை பிரதான சாலையில் நாளிதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. பெரும்பாலான மக்களுக்குத் தனியார் நாளிதழ்கள் விற்பனை செய்யப்படுவது ஒரு புதுமையான நிகழ்ச்சியாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் முதன்முறையாக மியான்மர் நாட்டில் தனியாருக்கு சொந்தமான நாளிதழ்கள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன.

இராணுவ ஆட்சியின் கீழ் அரசுக்குச் சொந்தமான பத்திரிகைகளே வெளியிடப்பட்டன. தனியாருக்குச் சொந்தமான பத்திரிகைகள் வெளியிட அனுமதிக்கப்படவில்லை.

தற்போது அரசின் புதிய கொள்கையின்படி தனியார் பத்திரிகைகள் வெளியிட அனுமதி தரப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியாளர்கள் கடந்த 1964-ல் தனியார் பத்திரிகைகளை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி வரும் இராணுவ ஆட்சியாளர்கள் ஆட்சி கடந்த 2011-ல் பதவியேற்றவுடன் பத்திரிகைகள் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இதற்கிடையே தனியார் வாரப்பத்திரிகைகள் பத்திரிகை சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் பர்மிய மொழியில் உள்ள வாரப்பத்திரிகைகளான தி வாய்ஸ், தி கோல்டன் பிரஷ் லேண்ட், தி யூனியன், தி ஸ்டாண்டர்ட் டைம் உள்ளிட்டவை நாளிதழ்களாக மாற்றப்பட்டுள்ளன.

தி வாய்ஸ் நாளிதழின் ஆசிரியர் ஆங் சோ கூறுகையில்: அதிகாலையிலேயே வாய்ஸ் பத்திரிகை விற்பனை மும்முரமாக இருந்தது.

தனியார் நாளிதழ்களை படிக்க பொதுமக்கள் எவ்வளவு ஆர்வமுடன் உள்ளனர் என்பதையே இது காண்பிக்கிறது.


இராணுவ ஆட்சியின்போது ஜனநாயக இயக்கம் மற்றும் அதன் தலைவர் ஆங் சான் சூச்சி குறித்து எழுதினாலே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என மூத்த பத்திரிகையாளர் தின்ஹா சா தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளின்படி 16 வார இதழ்கள் நாளிதழ்களாக மாற அனுமதிக்கப்பட்டுள்ளது.                                                                                                             


நன்றி :- தினமணி, 03-04-2013                             



0 comments:

Post a Comment

Kindly post a comment.