Tuesday, February 26, 2013

நெய்வேலிச் சுரங்கத்திற்கு 600 ஏக்கர் நிலம் கொடுத்தவருக்கு வெண்கலச்சிலை !

நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள ஜம்புலிங்க முதலியார் சிலையை திறந்துவைத்து மாலை அணிவிக்கிறார் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன்
.
என்எல்சி நிறுவனம் உருவாகக் கருவியாக இருந்த ஜம்புலிங்க முதலியாருக்கு  நெய்வேலி நகரில் இரட்டைப் பாலத்தில் முழுவுருவச் சிலை அமைக்கப்பட்டு, அதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

அன்றையத் தென்னாற்காடு ஜில்லா கடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் 1890-ல் பிறந்த ஜம்புலிங்க முதலியார், பெரும் நிலக்கிழாராக திகழ்ந்தவர்.

1934-ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான நிலத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது கருப்பு நிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வருவதைக் கண்டறிந்தார்.

பின்னர் அதை அப்போதைய ஆங்கில அரசின் நிலயியல் துறைக்கு அனுப்பிவைத்ததைத் தொடர்ந்து, அவர்கள் முதலியாரின் நிலத்தடியில் பழுப்பு நிலக்கரி இருப்பதை உறுதி செய்தனர்.

பின்னர் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டபோது முதலியார் தனக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை நிறுவனத்துக்குத் தானமாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து ஜம்புலிங்க முதலியாருக்கு முதலில் 2-ம் சுரங்க வாயிலில் சிலை அமைக்கப்பட்டது.÷ஆனால் அவை போதிய பராமரிப்பின்றி சிதைந்து போனதையடுத்து, பொதுமக்கள் அதிகம் புழங்கும் நெய்வேலி நகரினுள் இரட்டைப் பாலத்தின் மீது முழுவுருவ வெண்கல சிலையை நிறுவியது.

அச்சிலையை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன், இயக்குநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரமுகர்கள் முன்னிலையில் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜம்புலிங்க முதலியாரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
விழாவில் கலந்துகொண்ட ஜம்புலிங்க முதலியாரின் மகள் வழி பேரனான அமரன் தற்போது கடலூரில் வசித்து வருகிறார். அவர் பேசுகையில் "நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை.நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

இதுகுறித்து நிறுவனத் தலைவர் பி.சுரேந்திரமோகனிடம் கேட்டபோது, "அவர்கள் மனு கொடுத்தால் பரிசீலித்துத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.என்றார் .                                                                                                      
நன்றி :- தினமணி,  26-02-2013  

 ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஜம்புலிங்க முதலியாரின் முழுஉருவச் சிலையையும், வட்டம் 22ல் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில், 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நவரத்னா பூங்காவையும், என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் திறந்து வைத்தார்.

நவரத்னா பூங்காவில் 54 வகை அரிய வகை மூலிகைகள் அடங்கிய மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 54 வகை அறிவியல் உபகரணங்கள் அடங்கிய அறிவியல் பூங்காவும் விரைவில் திறக்கப்படஉள்ளது.
                                                                                               
நன்றி :- தினமலர்,  26-02-2013                                                                                                    

0 comments:

Post a Comment

Kindly post a comment.