Wednesday, January 23, 2013

நுண்ணறிவு இல்லாத நூல்கள்! -by neethiyaithedi.

புத்தகங்களே நம்மோடு சண்டை போடாத நண்பர்கள். வாசிக்கும் பழக்கமே அறிவை (அபி)விருத்தி செய்யும் என்பன போன்ற அறிவார்ந்த எழுத்தாளர்களின் தத்துவங்களை மனதில் கொண்டு, புத்தகங்களை வாங்கிக் குவிப்போர் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், ஒவ்வொரு வருடமும் இவ்வளவு நூல்களை விற்க வேண்டும் என பதிப்பகங்களால் இலக்கு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு கிட்டத்தட்ட வெற்றியும் பெறப்படுகின்றது. இதற்காகவே பல்வேறு புத்தகங்களை, புத்தகக் கண்காட்சிகளின் போது வெளிக் கொண்டு வருவார்கள்.

நாம் புத்தகம் எழுதினால், அதற்காக மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என்பதற்காக நூல்களை எழுதாத பேரறிஞர்கள் பலர் வாழ்ந்த காலம் மலையேறிப் போய், இப்போது அறிவு வறிஞர்கள் பலரும் கூட, நூல்கள் எழுதுவதைத் தொழிலாக வைத்திருக்கின்றனர்.

பணபலம் படைத்த வறிஞர்கள், பணத்தால் வறுமையாகவும் அறிவால் அறிஞராகவும் உள்ளவர்களை மடக்கி விலை கொடுத்து வாங்கித் தன் பெயரில் நூலாகப் போட்டுக் கொள்வார்கள். அப்படிப் போடும் அளவிற்கு தகுதியில்லாதவர்கள் பதிப்பாசிரியர் என்று உள்ளே நுழைந்து விடுவார்கள். இப்பணபலம் படைத்த வறிஞர்களிடம் பல மகான்கள் கூட ஏமாந்து போய், தங்களின் கொள்கைகளுக்கு, அவர்களே சமாதி கட்டிவிட்டுச் சென்று உள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியாது.

ஆனால், உண்மை இதுதான். இதுபற்றி மகான்களின் மகிமையும்; மடத்தனமும் என்று நீதியைத்தேடி… வரிசையில் ஐந்தாவது நூலான சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி என்கிற நூலில் எழுதியுள்ளேன்.

இம்மகான்களின் வரிசையில் கடைசியாக சிக்கியவர், சுமார் பத்து லட்சம் அன்பர்களை தன்பக்கம் கவர்ந்திழுத்து மெய்ஞான கருத்துக்களை போதித்தும், ஒரு மகான் எப்படி அமைதியாக சாமாதி நிலையை அடைய வேண்டுமோ அதற்கு நேர் மாறாக, தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக சாகடிக்கப்பட்ட அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியே! சிக்க வைத்தவர் ஈரோட்டைச் சேர்ந்த மயிலானந்தம் என்கிற பிரபல தமிழ் பிசினஸ் கொள்ளையரே!

எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்களது நூல் வெளிவருவதற்கு எனது அறிவுப்பூர்வமான ஒத்துழைப்பைக் கேட்டார்கள். நானும் சமுதாயத்திற்கு இரண்டு நல்ல நூல்கள் வெளிவருகிறதே என்ற ஆர்வத்தில் உதவி செய்தேன். ஆனால், “ஒருவரோ இருக்கக் கூடாத பொய்யான விசயங்கள் இருக்க வேண்டும் என்றார். மற்றவரோ, நூலின் மையக்கருவே, நூலில் இருக்க வேண்டாம்” என்றார்.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காததால், இதையெல்லாம் நான் ஆதரித்து எழுத முடியாது என்று சொல்லி விட்டேன். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் வருமானம் வந்திருக்கும்; சமுதாயத்திற்குப் பயன்படும் அந்நூல்களில் எனது பெயரும் வந்திருக்கும்; கூடவே சமுதாயத்திற்குப் பொய்யான தகவலும், முழுமையில்லாத தகவலும் வந்திருக்கும். தவறான செயல்களுக்கு நாம் காரணமாக இருக்க கூடாது என்பதாலேயே விலகிக் கொண்டேன். கடந்த 15-08-2012 அன்றே வெளிவந்திருக்க வேண்டிய அவ்விரண்டு நூல்களும் இன்னும் வெளிவரவில்லை; இனியும் வருமா என்பது சந்தேகம்தாம்.

ஏதோ ஒரு விதத்தில் புகழ்பெற்ற ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர, மற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் வறுமையில் வாடுபவர்கள்தாம். பேச்சாளர்களாவது, சமயத்துக்குத் தக்கவாறு பேசும் சமயப் பேச்சாளராக மாறி வறுமையின் கோரப் பிடியில் இருந்து தப்பித்து விடலாம்.

ஆனால் எழுத்தாளர்களால், அவ்வளவு சீக்கிரம் மாறி விட முடியாது. அதனால், வறுமையில்தாம் வாடுவார்கள். இவ்வகை எழுத்தாளர்களே கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்கள். இதனால் தற்கொலை செய்து கொண்ட கவரிமான் எழுத்தாளர்களும் உண்டு. இவர்களது எண்ணங்கள் எழுத்து மூலமாகப் பதிவு செய்யப்பட்டு விடுவதால்தாம், சமுதாயத்தில் எழுத்தாளர்களுக்கு என்றென்றும் மதிப்பு இருக்கிறது.

ஆனால், கொள்கைப்பிடிப்பு இல்லாத பேச்சாளர்கள், தமது பேச்சில் இருந்து பல்டி அடித்து விடுவார்கள் என்பதற்கு நாட்டில் ஏராளமான பேச்சாள தலைவர்களை பார்த்து இருப்பீர்கள். இனியும் பார்ப்பீர்கள்.

ஒரு நூலை எழுதி விட்டாலே நூலாசிரியர், ஆண்டுக்கு ஓரிரு இதழ்களை வெளியிட்டாலே பத்திரிகையாளர் என்கிற சிறப்பு அந்தஸ்து வந்து விடுவதாகவும் கற்பனையில் பலபேர் இத்துறைக்கு வருகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கையெழுத்துப் பத்திரிகையை நம்மவர்கள் நடத்தினார்கள்.  அதாவது ஒரு பத்திரிகை கார்பன் பேப்பர்களின் மூலம் ஐந்து முதல் பத்து வரையில் தயாரித்து, அதை முக்கியஸ்தர்களிடம் கொடுத்து, ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் அவ்வூர் மக்களை ஓரிடத்தில் கூட்டிப் படிக்கச் சொல்லி, ஆங்காங்கே விடுதலை உணர்வை ஊட்டினார்கள். ஆனால், இக்கணினி யுகத்தில் இதழை தட்டச்சு செய்து அதிகபட்சம் நூறு நகல்களை எடுத்துப் பத்திரிகை நடத்துவதாக சொல்லிக் கொள்கிறார்கள்.  

உணவுப் பொருட்களை விளைவிப்பவனுக்கும், அதனை சந்தையில் வாங்குபவனுக்கும் இடையில் எப்படி தரகர்கள், முதலாளிகள் பெறும் பங்குப் பணத்தை இரண்டு பக்கங்களில் இருந்தும் சுரண்டுகிறார்களோ, இழைக்கப்பட்ட அநீதிக்கு, நீதி கேட்கும் வழக்கு தரப்பினர்களிடம் இருந்து வக்கீல்களும், நீதிபதிகளும் எப்படி நிதியை தி(ரு)(ரட்)டுகிறார்களோ, அதுபோலவே ஒரு புத்தகத்தை எழுதுபவருக்கும், வாங்கும் வாசகர்களுக்கும் இடையில் பதிப்பக முதலாளிகள்தாம் அதிகமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.

இதனை உணர்ந்து கொண்ட வெகு சில எழுத்தாளர்கள், தாங்களே புதிதாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து தாங்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு, தெரிந்தவர்கள் மூலம் விற்றுக் கொள்கிறார்கள். 

பதிப்பாளர்கள் தங்களைச் சமுதாயத்தில் போட்டிப் போட்டு நிலை நிறுத்திக் கொள்ள, மறைமுகமாக என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் என்பது, உங்களுக்கு நன்றாகத் தெரிந்தால், அவர்கள் மீது எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே, உங்களுக்கும் வெளிப்படும்.

எனக்குத் தெரிந்த வரையில் நூல் எழுதுவதை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அடிப்படைக் கல்விக்கான நூல். மற்றொன்று வாழ்க்கைக் கல்விக்கான நூல். இவ்விரண்டுக்கும் படிப்புக்கும், அனுபவத்திற்கும் உள்ள நேர்ரெதிர் தன்மை உண்டு. இதனை விளங்கிக் கொள்வது எப்படி என்பதற்கு, எனது தொழில் பாணியில் ஒரு சிறு விளக்கம்.

கல்வி கற்றுத் தேர்ந்துள்ள ஒருவரிடம், நான்கு மீட்டர் நீளமுள்ள இரும்புக் கம்பியை ஒரு மீட்டர் நீளமுள்ள துண்டுகளாக, மிகச் சரியாக வெட்டினால் எத்தனை கிடைக்கும் என்றால் நான்கு கிடைக்கும் என்பார். இதையே கல்வி கற்காத ஆனால், அவ்வேலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரை கேட்டால் மூன்றுதாம் கிடைக்கும் என்பார்.

உடனே நாம், என்ன இருந்தாலும் படிச்சவன், படிச்சவன்தான்! என்னதான் படிக்கவில்லை என்றாலும், இந்த சிறு விபரமே தெரியாதவர் எப்படி வாழ்க்கையில் முன்னேறுவார் என்றே நினைப்போம். ஆனால் உண்மை என்ன?

படித்தவர் போட்டது கல்விக் கூடத்தில் போட்ட மனக் கணக்கு. படிக்காதவர் போட்டது, தன் வாழ்வில் நடைமுறைப்படுத்திய அனுபவக் கணக்கு. அதாவது இரும்புக் கம்பி உட்பட ஏதாவது ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் அல்லவா?

இதில் சிறந்த உபகரணம் என்று ஹாக்சா பிளேடை எடுத்துக் கொண்டால் கூட, அதன் கனம் ஒரு மில்லி மீட்டர் என்று கொண்டால், மூன்று முறை அறுத்தால், குறைந்தது மூன்று மில்லிமீட்டர் காணாமல் போய் விடும். இதுமட்டுமல்லாமல், மேலும் சில விசயங்கள் உண்டு என்பதை இதற்கு மேல் நீங்களே புரிந்து கொள்ள முடியும். 

இப்படிப்பட்ட வேறுபாட்டை களையும் ஒரு முயற்சியாக படித்த அறிவு வறுமைவாதிகள் கொண்டு வந்த திட்டமே, ‘‘ஆங்கிலத்தில் டாக்டரேட் என்று சொல்லப்படும் முனைவர் பட்டம்’’. இப்போது இப்பட்டமானது பல்கலைக் கழகங்களால் கூவி கூவி விற்கப்படுவதால், பணம் சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள், அதனை வாங்கவும் அலைமேதுகிறார்கள்.

இவர்கள் மேற்கொள்ளும் சுய(நல)க்கள ஆய்வு மற்றும் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் எல்லாம் கூட, நான் முன்னர் சொன்ன எழுத்தாளர்களைப் போன்றதே என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கல்விக்கான நூல் என்பது ஆரம்ப நிலை என்பதால் எளிதான விசயங்களாகவே இருக்கும். ஆனால், வாழ்க்கைக்கான நூல் என்பது கரடுமுரடான பாதைகளைக் கடந்து சென்று, வெற்றியை நிலை நாட்டுவதற்கான நூல் என்பதால், அதில் கரடுமுரடான சங்கதிகள் கூட கனகட்சிதமாகச் சொல்லப்பட வேண்டும். இதற்குச் சொந்த அனுபவமே பெரிதும் உதவும்.

ஆனால், இதற்கு மாறாக, பள்ளிக் கல்வி நூல்களும், வாழ்க்கைக் கல்வி நூல்களும் ஒன்றையொன்று காப்பியடித்து எழுதப்படுகிறது. இதுவும் எதைப் பார்த்து எழுதப்படுகிறது என்றால், காப்பியடித்து எழுதப்படும் ஆராய்ச்சி நூல்களைப் பார்த்து, காப்பிடியடித்து எழுதப்படுகிறது. இக்காப்பித் திருட்டுக்கான உரிமை ஆசிரியருக்கே அல்லது பதிப்பகத்தாருக்கே என்பது  அவர்களுக்கு அவர்களே கொடுத்துக் கொள்ளும் முத்திரை.

ஆனால், காப்பியடிக்கவில்லை; சொந்த அனுபவத்தில் எழுவது போன்ற ஒரு மாயை, திருட்டில் திறமையான அவ்வெழுத்தாளரால், அவரது முன்னுரையில் அல்லது என்னுரையில் மட்டுமல்லாத அதற்காக புகழ் மிக்கவர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கப்படும் அத்துணை உரைகளிலும் இருக்கும். ஏனெனில், இவைகளைப் பார்த்துதானே, நாம் நூல்களை வாங்குகிறோம்.

ஆம்! ஒரு நூலுக்கான அணிந்துரையை, ‘‘அந்நூலின் ஆசிரியர் அல்லது பதிப்பாளர் தனக்கு நன்கு பரிச்சயமான அன்பர்கள் அல்லது நண்பர்கள் மற்றும் பிரபலங்களிடம்தாம், வாங்குவார்கள்’’.

ஆதலால், அவ்வன்பர்கள் மற்றும் நண்பர்கள், தனது நண்பரின் நூலைப்பற்றி, ஏதாவதொரு பெயரில், வெகுவாக பாராட்டித்தாம் உரையை அளிக்க முடியும் என்கிற கட்டாயம் ஏற்படுகிறது.  மேலும், இதில் உள்ள சில வெற்றுச் சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் இங்கு விவரிக்க முடியாத அளவிற்கு அசிங்கமானவை என்பதை மேற்கோள் சங்கதிகள் மூலம் நீங்களே புரிந்து கொள்ள முயல வேண்டும். 

எத்தனை நூல்கள் வாங்கினீர்கள், அதன் மூலம் என்னென்ன அறிவை வளர்த்துக் கொண்டீர்கள், அதனைப் பயன்படுத்தி என்ன சாதித்தீர்கள் எனச் சிந்தித்தால், நான் சொல்லும்  இந்த உண்மைகள் எல்லாம் புரியும் என்பதை விட, உங்களின் இயல்பான சிந்தனைத் திறன் கூட மழுங்கியிருக்கிறது என்பதும் உங்களுக்குப் புரிய வரும். எப்படி மழுங்காமல் இருக்கும் என்பது நான் கூடுதலாக உங்களுக்குத் தொடுக்கும் கேள்வியும் ஆகும்.

இக்கேள்விக்கான பதிலை விளக்கப் பதிப்பாளர்களின் கொள்கையில்லாக் கொள்ளையை, புத்தக கண்காட்சிகளில் நீங்களே கண்கூடாகப் பார்க்கும் விசயத்தை முன்னிருத்திச் சொன்னாலே போதும் என நினைக்கிறேன்.

புத்தக கண்காட்சிகளின் முக்கிய நோக்கம், அறிவுத் தேடல் இருப்பவர்களை, அலைய விடாமல் ஒரே இடத்தில் அவர்களின் தேடலுக்கு விடை கிடைக்கச் செய்யத்தானே! இத்தேடல் எந்த நூலில் வேண்டுமானாலும் கிடைக்கலாம் அல்லவா?

ஆனால், புத்தகக் கண்காட்சியை நடத்தும் வெளியீட்டாளர்கள், தங்களின் பண பலத்தால், காவல்துறையைச் சரிக் கட்டி, அப்புத்தகக் கண்காட்சி நடத்தும் இடத்திற்கு வெளியே விற்கப்படும்  பழைய நூல் விற்பனையாளர்களை எல்லாம், தங்களின் விற்பனை பாதிக்கப்படுவதாகக் கூறி விரட்டியடித்து விடுகிறார்கள்.

இதுபோன்ற செயல்பாடுகளில் இறங்கும் பதிப்பாளர்களுக்கும், காவல்துறைக்கும் வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அடிப்படை அறிவே இல்லை என்று சொல்லுவது மிகவும் சாலப் பொருத்தமாக இருக்கும்.

பதிப்பாளர்களின் உண்மையான நோக்கம் உங்களின் அறிவுக்கான தேடலே; மாறாக, அவர்களுக்கான பணத்தேடலே அல்ல என்றால், அவர்கள் பழைய புத்தகங்களை விற்பவர்களுக்குதானே முன்னுரிமை தர வேண்டும்?

ஆம்! பழைய நூல்கள் எல்லாம் யாருடையது?

நிச்சயமாக அதனை விற்பனை செய்யும், அவ்வியாபாரிகளுடையது அல்லவே ?

மாறாக, இதே பதிப்பாளர்களால் முன்னர் அச்சடிக்கப்பட்டு, விற்கப்பட்டுப் பணம் பண்ணப்பட்டதும், பார்க்கப்பட்டதும், படிக்கப்பட்டதும் வேண்டாம் என தூக்கியெறியப் பட்டது தானே?

இப்படி, ஏற்கனவே அச்சிட்ட விற்ற அந்நூல்களே குப்பையில் கிடக்க மேன்மேலும் அதே நூல்களை அல்லது அவைகளில் இருந்து காப்பியடிக்கப்பட்ட நூல்களை அல்லது  புதிது புதிதாக நூல்களை வெளியிட வேண்டிய  அவசியம் என்ன இருக்கிறது?

இந்நூல்கள் உபயோகமற்றது என்கிற நிலையில், நீங்கள் தூக்கிப் போடும் அல்லது எடைக்குப் போடும் நூல்களை, கொஞ்சமாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலம் கலந்த  பொதுநல அக்கறையில், அவைகளைத் தூசு தட்டி, கிழிசல்களை ஒட்டி, பல மாதங்கள், வருடங்கள் பாதுகாத்தும், சுமந்தும் விற்பனை செய்து, எழுத்தாளர்களின் / பதிப்பாளர்களின்  படைப்புகளுக்கு மறு உயிரோட்டம் கொடுப்பதைத் தடுக்கப் பதிப்பகத்தார்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை அந்நூல்களின் வாசகர்களாகிய நீங்களே நினைத்துப் பார்க்க வேண்டும்.

இப்பழைய புத்தக விற்பனையில், முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயம், கணிசமான மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டு, இயற்கையும், சுற்றுப்புறச் சூழலும், உயிரினங்களின் ஆரோக்கியமும் சிறிதளவாவது காக்கப்படுகிறது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

இவைகளை எல்லாம் சிந்திக்காத இப்பதிப்பாள மடையர்கள் வெளியிடும் நூல்கள் எப்படி உங்களின் அறிவை வளர்க்க உதவும். மாறாக, அவர்களுக்கு மழுங்கியிருப்பதைப் போன்றே மழுங்கத்தானே செய்யும்?

நான் மரம் நடுகிறேன் பாருங்கள் என்று யாரோ வெட்டிய குழியில், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, யாரோ வளர்த்து கொடுத்த செடியை நோவாமல் நட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்.

நாம் நடுவது மரமல்ல; பிற்காலத்தில் மரமாக வளர்வதற்கான செடியே என்பது கூட தெரியாமல், அதனை மரம் நடுவிழா என்கிறார்கள்.  இதேபோன்றே நீங்களும் ஆளுக்கொரு மரம் வளருங்கள் என்று பிரச்சாரம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அதில் பிரபல எழுத்தாளர்களின் பங்கும், அச்சு ஊடகங்களின் பங்கும் மிகமிக அதிகமாக இருக்கும்.

ஏனெனில், நீங்கள் நட்டு வளர்த்தால்தான், அவர்கள் அதனை வெட்டிச் செய்யும் வெட்டி வேளையில் கூட, உங்களிடம் இருந்தும் சுரண்ட முடியும். ஆனால், இந்த சூட்சம ரகசியம் புரியாமல் பலரும், இதற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். அந்தோ பாவம்!

தனது எழுத்துக்கள் மூலம் சமூதாயத்தைச் சீர்த்திருத்த வேண்டிய, மிக முக்கியப் பங்கில் உள்ள கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர்கள் தங்களின் ராயல்டி மற்றும் இன்ன பிற காரண காரியங்களுக்காக இதுபோன்ற சமுதாய அவலக் கூத்துக்களைக் கண்டும், காணாமல் இருப்பது எப்படி நியாயமாகும். இவர்கள் எப்படி சமூக சீர்த்திருத்தவாதிகள் ஆவார்கள் என்கிற கேள்விகள் தான் இயல்பாக எழுகின்றது.

இறுதியாக, பதிப்பாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட இயற்கை வளம் மற்றும் உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, மறு கொள்ளைக்கான மூலதன முயற்சியே அவ்வப்போதும், ஆண்டுதோறும், ஆரம்பரமாகவும் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகள்.

இது ஒருபோதும் உண்மையாகாது என்றால், இவர்களின் ஆடம்பர அரங்குகளுக்கு முன்பாகவே, இவர்களின் புத்தகங்களைப் பாதுகாக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்கென்று தனியாக அரங்கம் அமைத்து கொடுக்கட்டும். இங்கு கிடைக்காத புத்தகங்களை, இவர்களின் புது அரங்குகளில் மக்கள் வாங்கி கொள்ளட்டுமே! இதை யார் தடுக்க முடியும்?

எவ்வளவுக்கு எவ்வளவு பழைய நூல்களைத் தேடிப்பிடித்துப் படிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அந்நூலின் மற்றும் உங்களது தேடலின் அசல் கருத்துக்களைப் படிக்கிறீர்கள் என்பது, நுட்பமான வாசகர்களுக்கு மட்டுமே புரியும். 

இதெல்லாம் சரிங்க, சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்க வழி என்ன என்கிறீர்களா?

நூலைத் தேர்ந்தெடுத்து வாங்கும் போது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம், அந்நூல் சொந்தமாக எழுதப்பட்டதா அல்லது பல நூல்களில் இருந்து திருடப்பட்டதா என்பதை சரி பார்க்க வேண்டும். இதில் மேற்கோள் காட்டுவதற்காகச் சொல்லப்படும் சங்கதிகள் ஒருபோதும் திருட்டில் அடங்காது என்பதை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனைச் சரிபார்ப்பது மிகமிக எளிது. அந்நூலின் இறுதிப் பக்கத்திற்குச் சென்றால், இந்நூலை எழுத உதவிய நூல்கள் என குறைந்தது பத்து, பதினைந்து நூல்களின் பட்டியல் இடப்பட்டிருக்கும். அப்படி இருந்தால், எடுத்த எடுப்பிலேயே இது பல்வேறு நூல்களில் இருந்து திருடி எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு, வேண்டாம் என ஒதுக்கி விட வேண்டும்.

இதுபோன்ற பட்டியலிடப்பட்ட நூல்கள் பெரும்பாலும், கூடங்குளம் அணு உலை, இராமர் பாலம் போன்ற, பொதுமக்களால் எது உண்மையென எளிதில் உணர முடியாத சர்ச்சைக்கு உரிய சங்கதிகளில்தாம் இருக்கும். ஆதலால், ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டு தரப்புக்குமே லாபம்தான். 

இவ்வளவு வெளிப்படையாகவே பட்டியல் போடுகிறார்கள் என்றால், ‘‘எளிதில் கண்டு பிடித்து விடுவோம் என்பது தெரியாமலா போடுகிறார்கள்’’ என நீங்கள் நினைத்தால், பலருக்கும் இதுபற்றித் தெரியாது என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் அந்நூலால் பிரச்சினை ஏதும் எழுந்தால் அல்லது யாராவது கேள்விகள் கேட்டால், பட்டியலிடப்பட்டுள்ள நூலில் இருந்ததைத்தான் நான் சொன்னேனே தவிர, ‘நானாக எதுவும் சொல்லவில்லையே’ என, தப்பிக்கவும் வழியுண்டுதானே?

திருடி எழுதப்பட்ட ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்களில், உதவிய நூல்கள் பட்டியலை ஒருபோதும் பார்க்கவே முடியாது. காரணம், இதெல்லாம் நான் உணர்ந்து எழுதியது என்றும், உங்களுக்கு அந்த ஞானம் வரும் போது இது புரியும் என்று ஒரேயடியாகப் புளுகி விடுவார்கள்.

இப்படி எத்தனையோ வகையான புத்தகங்கள் வெளி வருகின்றன. அதிலும் குறிப்பாக, இப்போது இணையத்தில் எதைப்பற்றித் தட்டினாலும், அது தொடர்பான பல்வேறு விபரங்களை எவ்வித அலைச்சலும் இன்றி, எளிதாக எடுத்து விட முடிகிறது என்பதால் திருட்டு எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இவைகள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக உங்களுக்குச் சொல்ல இயலாது என்பதால் நீங்கள்தாம் எச்சரிக்கையோடு நூல்களைத் தேர்வு செய்து வாங்க வேண்டும்.  

எனது விழிப்பறிவுணர்வுகள் எல்லாம் திருட்டு எழுத்தாளர்களில் உலகமகாத் திருடர்களாக முன்னிலை வகிப்பவர்கள், அறிவு வறுமையிலும் பெருமை தேடும் வக்கீல்களும்; நீதிபதிகளைப் பற்றியதுமே ஆகும்! பதிப்பகங்களுக்கு இவர்களே சட்ட ஆலோசகர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும், நீங்கள் இந்நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

சமுதாய நலன்களுக்காக மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு மொழிகளில் கொண்டு வரப்படும் மக்களுக்கான சட்டங்களை, அப்படியே காப்பியடித்தும், தத்தமது தாய்மொழிகளில் அப்படியே மொழி பெயர்த்து எழுதுவார்கள். கூடவே, தேவைப்படும் இடங்களில் தங்களுக்குத் தெரிந்த, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளின் சுருக்கத்தைக் குறிப்பிட்டு விடுவார்கள். 

அதாவது, ‘‘ஐ அம் ரீடிங் தி புக்ஸ் நீதியைத்தேடி… ஆதர் ஆப் வாரண்ட் பாலா!’’ என்று ஆங்கிலத்தில் ஒரு சட்ட வாக்கியம் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் இதனை, ‘‘நான், வாரண்ட் பாலா எழுதிய நீதியைத்தேடி… நூல்களைப் படித்துக் கொண்டு இருக்கிறேன்!’’ என்றுதானே மொழி பெயர்க்க வேண்டும்.

ஆனால் இவர்களோ, ‘நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், நீதியைத்தேடி… நூல்களை, வாரண்ட் பாலா எழுதியது என்றோ அல்லது நான் படித்துக் கொண்டு இருக்கிறேன், வாரண்ட் பாலா எழுதியுள்ள நீதியைத்தேடி… நூல்களை’ என்றோ அவர்களுக்கே புரியாமலும், அப்படியே புரிந்தாலும் கூட, வாசகர்கள் யாருக்கும் எளிதாகப் புரிந்து, சட்ட விழிப்பறிவுணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடே எழுதுவார்கள்.

இதுபற்றி விளக்கம் கேட்டால், சட்டத்தில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல் இருக்குங்க… அதெல்லாம் உங்களுக்குப் புரியாது… சட்டத்தில் போட வேண்டிய இடத்தில் முற்றுப்புள்ளி, கமா போன்றவைகளைப் போடாமல், மாற்றிப் போட்டு விட்டால் அர்த்தம் அடியோடு மாறி விடும் எனவும், என்னமோ இவர்களே இம்மியும் பிறழாது சட்டத்தை மதித்து நடப்பது போலவும், காப்பது போலவும் அங்கலாய்ப்பார்கள்.

சட்ட நூலே இப்படியென்றால், நீதிபதிகள் வழங்கும் செல்லாத தீர்ப்புகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  மொழி பெயர்ப்பில் தவறு நேர்ந்து விட்டால், நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் என பயங்கர பீலாவெல்லாம் விடுவார்கள். பீலாவிட இவர்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? அதெல்லாம் ரத்தத்திலேயே ஊ(நா)றிப்போன ஒன்றுதானே!

ஒரு வக்கீல் பிறமொழிகளில் இருந்து தமது தாய்மொழியில் மொழி பெயர்த்து எழுதுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே மொழியில் வேறு ஒருவரும் எழுதினால், முதல் திருடரிடம் இருந்து முற்றிலும் திருடப்பட்டதுதாம் இது என்பது தெரியாமல் இருக்க, ‘‘ஒருவர் ‘சென்றான்’ என்று எழுதியிருக்கும் இடங்களில் எல்லாம் மற்றவர், ‘போனான்’ என்று எழுதுவார்’’. அவ்வளவே. இது ஒரு உதாரணத்துக்கு தான்.

இப்படிப்பட்ட கூத்துகள் பெரும்பாலும் சட்டத்தை வரச் செய்யும் வக்கீல்களின் வரைவுக் குழுவில் ஆரம்பித்து, தீர்ப்பு வரை தொடர்வதால்தாம், சட்டம் அவர்கள் உட்பட எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இதெல்லாம் எனக்கு எப்படி புரிகிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

அரசு இயற்றிய சட்டத்திற்கும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், அதை அப்படியே அல்லது மொழி பெயர்ப்பை நூலாக எழுதியவர்கள் அல்லது வெளியிடுபவர்கள் எப்படி காப்புரிமை கொண்டாட முடியும். ஆனாலும், நம்மை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில் காப்புரிமை தங்களுக்கே என போட்டுக் கொள்கிறார்கள், பொய்யர்கள்.

சரி, இனி சட்ட நூல்களைத் தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை குறித்து சற்று விரிவாகவே பார்ப்போம்.

சட்டம் குறித்த நூல்கள் அல்லது மொழி பெயர்ப்பு நூல்கள் என்றால், ஒன்று முதல் பிரிவுகள் வரிசையாக இறுதி வரை கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை சோதித்து அறிந்த பின்னரே, வாங்க வேண்டும். ஏனெனில், சட்ட நூல்களை எழுதும் வக்கீல்களும், நீதிபதிகளும் தங்களுக்கு பாதகமான, குறிப்பாக தாங்கள் வாதாடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளை எழுதாமல் மறைத்து விடுகிறார்கள்.

உண்மையானதொரு உதாரணமாக சொல்லப் போனால், என்னைப் போன்ற சட்டப்படிப்பு படிக்காத, பார் கவுண்சிலில் பொய்யராக பதிவு செய்து கொள்ளாத, ஆனால் சட்டத்தில் புலமையுள்ள நபர்களை மற்றவர்களுக்காக வாதாட அனுமதிக்க வேண்டும் என்கிற வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் பிரிவு 32 ஆனதும் பொய்யர்களால் எழுதப்படும் நூல்களில் இருக்காது.

தொழிற்தகராறு சட்டம் 1947 இன் பிரிவு 36 இல் நான்கு உட்பிரிவுகள் உண்டு. இதில் மூன்றாவது உட்பிரிவு, ‘‘வக்கீல்கள் தொழிலாளர் தொடர்பான வழக்குகளில் வாதாட தடை விதிக்கிறது. நான்காவது உட்பிரிவின்படி, வழக்குத் தொடுக்கும் தொழிலாளி, எதிர்த்தரப்பில் வக்கீல் ஆஜராக ஆட்சேபணை செய்யாவிட்டால், நீதிமன்றம் அனுமதிக்கலாம் என்று உள்ளது’’. இதனை எனது தொழிற்தகராறு வழக்கொன்றில் நிலைநிறுத்தினேன்.

ஆனால், பொய்யை மூலதனமாகவும், திருட்டைத் தொழிலாகவும் செய்யும் வக்கீல்களும் நீதிபதிகளும் இவைகளை நூல்களில் எழுதாமல் மறைத்து விடுகிறார்கள். தொழிலாளிகளின் முதலாளிகளான தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் கூட கண்டு கொள்வதில்லை. நீங்கள் விழிப்பறிவுணர்வோடு  இருந்தால்தாம். இல்லையென்றால் எல்லோருமே கூட்டு களவாணித்தனம்தான் செய்கிறார்கள்.

இதேபோல, குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் 1984 இன் பிரிவு 13 இன்படி, ‘‘கணவன் மற்றும் மனைவி இருவருமே வக்கீல் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. விதிவிலக்காக நீதியின் நலனை முன்னிட்டு, நீதிபதி தனது உதவிக்காகத் தேவைப்பட்டால் ஒரு வக்கீலை அமர்த்திக் கொள்ளலாம்’’.

இதுவும் அந்நீதிமன்றத்திற்கு வருகின்ற அத்துணை வழக்குகளிலும், ‘‘கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே வக்கீலைத்தான் நியமிக்க முடியுமே தவிர, தனித்தனியாக நியமிக்க முடியாது. இப்படி நியமிக்கப்படும் வக்கீலுக்கு மாநில அரசே கூலி வழங்க வேண்டும்’’ என  சட்டப்பிரிவு 23(2)(ஈ) இல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், குடும்ப நீதிமன்றங்களில் துக்கத்திற்காகக் கூடும், காக்காய்கள் போல வக்கீல்கள் கூட்டத்தைக் காலையில் பார்க்கிறோம். ஆனால், காக்காக் கூட்டத்தில் கல் எறிந்தது போல, இந்த காக்காய்கள் நீதிமன்றம் ஆரம்பித்த அரை மணி நேரத்திற்கெல்லாம் வாய்தா வாங்கி கொண்டு கலைந்து விடுகின்றன என்பதையும் பார்க்கிறோம்.

எனது சட்ட ஆராய்ச்சியில், வக்கீல்கள் எந்தவொரு வழக்கிலுமே சட்டப்படி வாதாட முடியாத அளவிற்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தடையிருக்கிறது. ஆனால், ‘‘பொதுமக்களிடம் போதுமான சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையால், வக்கீல்களின்பாடு படுகொண்டாட்டம் ஆகவும், சமுதாயத்தின்பாடு படுதிண்டாட்டம் ஆகவுமாக, நெடுங்காலமாக இருந்து வருகிறது’’.

இதனை என்னால் முடிந்த அளவு சீர்த்திருத்த முயன்றுள்ளேன். ஆனால், இச்சீர்த் திருத்தங்கள் எல்லாம் திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்கிற பழமொழி போல, வக்கீல்களும் நீதிபதிகளும் நவீன திருடர்களாக மாறி வருகின்றனர்.  குடும்ப நீதிமன்றங்களில் இது கண்கூடாகவே தெரிகிறது.

இதுவும், நமக்குக் கிடைத்த வெற்றியே! ஆராய்ச்சியின் வெற்றி மைல் கல்லே!! என்றாலும், வக்கீல் படிப்பை ஒழித்துகட்டும் வரை சமுதாயத்திற்கு ஓய்வு கிடையாது. வெற்றியாகவும் கருதக்கூடாது.

ஏனெனில், வக்கீல்கள் எப்படி தங்களின் பிழைப்புக்குத் தக்கவாறு சட்ட விதிகளை மறைத்து எழுதும் அவலம் நடக்கிறதோ, அதுபோலவே இந்திய அரசும், தங்களின் பிழைப்புக்காக இந்திய அரசமைப்பில் சேர்த்து எழுதும் அவலமும் அறங்கேற்றப்பட்டது. அது என்ன, என்ன ஆனது என்பதுபற்றியும் சமூகம் இனியும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் கஷ்டப்பட போவது, நாம் மட்டுமல்ல; முச்சந்தியில் நிற்கப்போவது நமது சந்ததிகளும்தாம் என்பது பற்றி, திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்…? என்கிற தலைப்பில் கட்டுரை விரைவில் வெளிவரும். 

சட்டப்பிரிவுகள் வரிசையாகச் சொல்லப்பட வேண்டும் என்பது ஒருபோதும் சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களுக்கு நிச்சயம் பொருந்தாது.

ஏனெனில், இது சட்டத்தின் அம்சங்களைப் பற்றி சிறப்பான முறையில், நன்றாக புரியும்படி தத்தமது பாணியில், மேற்சொன்ன தொழிலாளர் மற்றும் குடும்ப நீதிமன்றத்தில் வக்கீல்களின் பங்கு பற்றிச் சொல்லியுள்ளது போல, சட்டத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் அனுபவத்தின் அடிப்படையில் ஆராய்ந்து நிறைகுறைகளை ஆதரித்தும், விமர்சித்தும் எடுத்துரைப்பதாகுமே தவிர, சட்டத்தை அப்படியே ஈ அடிச்சான் காப்பியாக எழுதுவது கிடையாது.

மேலும், ஒன்றுக்கும் உதவாத உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றங்களின் தீர்ப்புகளை சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களில் மேற்குறிப்பாகக் காட்டியிருக்க கூடாது. ஏனெனில், விதிவிலக்கான ஓரிரு சமயங்கள் தவிர மற்றபடி, சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்லப்படுகிறதே தவிர, தீர்ப்பின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப் படுவதில்லை.

ஆனால், நியாயம்தான் சட்டம் என்கிற கோட்பாட்டிற்கு இணங்க அமலில் இருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக, நீதிமன்றங்களால் தீர்ப்புரைக்கப்பட்டால், அதுபற்றி அவசியம் விளக்க  வேண்டும். அப்போதுதான் நிதிபதிகளின் அநீதிகள் வாசகர்களுக்கு நன்கு புரியும்.

இறுதியாக சரிங்க, உங்களைப் போல இத்தவறுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்து, விலைக்கு வாங்க எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரிய வேண்டுமே… இதெல்லாம் சாத்தியமா…

ஆதலால், இது போன்ற முறைகேடுகளைத் தடுக்க சட்டப்படி என்ன செய்யலாம் என்று கேள்வி உங்களுக்கு எழுந்தால், நாம் வாங்கும் பொருட்கள் எப்படித் தரம் குறைவானதாகவோ அல்லது குறைபாடு உள்ளதாகவோ இருக்கும் போது, அதனை திருப்பித் தந்து பணத்தைப் பெறுகிறோமோ அல்லது வேறு மாற்றிக் கொள்கிறோமோ அதுபோல நூல்களையும் செய்யும் நிலை வரவேண்டும். பதிப்பாளர்கள் ஏற்காத போது, சேவைக் குறைபாடு என வழக்கு தொடுக்க வேண்டும்.

ஆனால், இவ்விரண்டு நிலைகளும் இதுவரை வந்தாக தெரியவில்லை. இரண்டாவது நிலை வரும் போது, நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் கருப்பு அங்கி (கோட்டு) சாதியினரான பொய்யர்களையும், கொள்ளையர்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆக, போகப்போகச் சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் இருந்து நீங்கள் தப்பவே முடியாது. தவறினால்,
நீங்களே தவறி விட்ட
(உயிரோடு இருந்தும் இல்லாத)
நிலைதாம்!   

 http://www.neethiyaithedy.org p=554                                                                   

பழைய புத்தக விற்பனையாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில் எழுதத் துவங்கிய கருத்துக்கள் பல்வேறு பரிணாமங்களைச் சுட்டிக்காட்டுகின்றது. ஐந்து சட்ட நூல்களைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ள பாலா, சென்னை வட்டார வழக்கு வார்த்தைகளைத் தவிர்த்திருந்தால் நல்லது. இக்கட்டுரை பல தலைப்புக்களுக்கான தகவல்களை உள்ளடக்கியிருக்கின்றது. இவ்வகையிலும் கவனம் செலுத்தப்படுதல் மேலும் சிறப்புத் தரும்.

கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் குடும்ப நீதிமன்ற வழக்குகள் குறித்த சட்ட திட்டங்கள் வியப்பைத் தருகின்றன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.