Friday, January 18, 2013

சூடானில் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்ற மோதல் 100 பேர் சாவு சில கிராமங்கள் தீக்கிரை!



சூடான் நாட்டில் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக இரு பழங்குடியினப் பிரிவினரிடையே நடைபெற்ற மோதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்டின் நெசிர்கி இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: டார்பர் பகுதியில், ஜெபர் அமிர் எனுமிடத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெனி ஹுசைன் மற்றும் அபல்லா என்ற இரு பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

ஜனவரி 5 முதல் 9ஆம் தேதி வரை மோதல் உச்சகட்டத்தில் நடைபெற்றது. இதில், 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

சில கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள், வசிப்பிடத்தை விட்டு வெளியேறி விட்டனர். கடந்த 10 ஆண்டுகளாகவே சூடானில் வன்முறை நிகழ்ந்து வருகிறது. பழங்குடியினரின் மோதல், வன்முறையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

துப்பாக்கி ஏந்திய போராட்டக்காரர்கள், சாலைகளில் தடையை ஏற்படுத்தியுள்ளனர். ஐ.நா. பார்வையாளர்களை அப்பகுதிக்குள் அனுமதிக்கவில்லை.

இருப்பினும், கடந்த சில நாள்களாக வன்முறை கட்டுக்குள் இருக்கிறது. டார்பரில் செயல்படும் ஐ.நா- ஆப்பிரிக்க கூட்டமைப்பு உதவி மையம் சார்பில் 75 ஆயிரம் கிலோ எடையுள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத் திட்டத்தின் வாகனங்கள் அப்பகுதிக்குச் செல்ல, போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சூடான் வன்முறையால் 2003ஆம் ஆண்டில் இருந்து சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றார் மார்டின் நெசிர்.      


http://www.nilavaram.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.