தனதன தான தனதன தான
தந்தனந்தன தந்தனந்த
தனனதனந்த தனனதனந்த
தானன தானன தானன தந்த
தந்தனதான தனதானனா
ஒருமடமாது மொருவனுமாகி யின்பசுகந்தரு
மன்புபொருந்தி யுணர்வுகலங்க யொழுகியவிந்து
வூறுசுரோணித மீதுகலந்து -
பனியிலோர்பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்துபு
குந்திரண்டு பதுமவரும்பு கமடமிதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகளென்ற -
உருவமுமாகி உயிர்வளர்மாத மொன்பதுமொன்று
நிறைந்துமடந்தை யுதரமகன்று புவியில்விழுந்து
யோகமும்வாரமு நாளுமறிந்து -
மகளிர்கள்சேனை தரவணையாடை மண்படவுந்தியு
தைந்தகவிழ்ந்து மடமயில்கொங்கை யமுதமருந்தி
யோரறிவீரறி வாகி வளர்ந்து -
ஒளிநகையூற விதழ்மடவாரு முவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியிலிருந்து மழலைமொழிந்து
வாவிருபோவென நாமம்விளம்ப -
உடைமணியாடை யரைவடமாட வுண்பவர்தின்பவர்
தங்களொடுண்டு தெருவிலிருந்து புழுதியளைந்து
தேடியபாலரொ டோடிநடந்து -
அஞ்சுவயதாகி விளையாடியே.
உயர்தருஞான குருவுபதேச முத்தமிழின்கலை
யுங்கரைகண்டு வளர்பிறையென்று பலரும்விளம்ப
வாழ்பதினாறுபி ராயமும்வந்து -
மயிர்முடிகோதி யறுபதநீல வண்டிமிர் தண்டொடை
கொண்டைபுனைந்து மணிபொனிலங்கு பணிகளணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க -
மதனசொரூப நிவனெனமோக மங்கையர்கண்டும
ருண்டுதிரண்டு வரிவிழிகொண்டு கழியவெறிந்து
மாமயில்போலவர் போவதுகண்டு -
மனதுபொறாம லவர்பிறகோடி மங்கலசெங்கல
சந்திகழ்கொங்கை மருவமயங்கி யிதழமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி -
ஒருமுதலாகி முதுபொருளாயி ருந்தனங்களும்
வம்பிழந்து மதனசுகந்த விதனமிதென்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து -
வளமயுமாறி யிளமையுமாறி வன்பல்விழுந்திரு
கண்களிருண்டு வயதுமுதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோதகு ரோதமடைந்து -
செங்கையினிலோர்த டியுமாகி -
வருவதுபோவ தொருமுதுகூனு மந்தியெனும்படி
குந்திநடந்து மதியுமழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல்வி டாமன்மொழிந்து -
துயில்வருநேர மிருமல்பொறாது தொண்டையுனெஞ்சுமு
லர்ந்துவறண்டு துகிலுமிழந்து கணையுமழிந்து
தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு -
கலியுகமீதி லிவர்மரியாதை கண்டிடுமென்பவர்
சஞ்சலமிஞ்ச கலகலவென்று மலசலம்வந்து
கால்வழிமேல்வழி சாரநடந்து -
தெளிவுமிராம லுரைதடுமாறி சிந்தையுநெஞ்சமு
லந்துமருண்டு திடமுலந்து மிகவுமலைந்து
தேறிநலாதர வேதனநொந்து -
மறையவன்வேத நெழுதியவாறு வந்ததுகண்டமு
மென்றுதெளிந்து இனியெனகண்ட மினியெனதொந்த
மேதினிவாழ்வுநி லாதிமிநின்ற -
கடன்முறைபேசு மெனவுரைநாவு றங்கிவிழுந்துகை
கொண்டுமொழிந்து கடைவழிக்கஞ்சி யொழுகிடவந்து
பூதமுநாலுசுவாச முநின்று
நெஞ்சுதடுமாறி வருநேரமே.
வளர்பிறைபோல வெயிறுமுரோம முஞ்சடையுஞ்சிறு
குஞ்சியும்விஞ்ச மனதுமிருண்ட வடிவுமிலங்க
மாமலைபோல்யம தூதர்கள் வந்து -
வலைகொடுவீசி யுயிர்கொடுபோக மைந்தரும்வந்துருகு
னிந்தழநொந்து மடியில்விழுந்து மனைவியும்புலம்ப
மாழ்கினரேயிவர் காலமறிந்து -
பழையவர்காணு மெனுமயலார்கள் பஞ்சுபறந்திட
நின்றவர்பந்த ரிடுமெனவந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியுமென்று -
பலரையுமேவி முதியவர்தாமி ருந்தசவங்கழு
வுஞ்சிலரென்று பணிதுகில்தொங்கல் களபமணிந்து
பாவகமேசெய்து நாறுமுடம்பை -
வரிசைகெடாம லெடுமெனவோடி வந்திளமைந்தர்கு
நிந்துசுமந்து கடுகிநடந்து சுடலையடைந்து
மானிடவாழ்வென வாழ்வெனநொந்து -
விறகிடமூடி யழல்கொடுபோட வெந்துவிழுந்துமு
நிந்துநிணங்க ளுருகியெலும்பு கருகியடங்கி
யோர்பிடிநீறுமி லாதவுடம்பை -
நம்புமடியேனை யினியாளுமே.
-பட்டினத்துப் பிள்ளையார் என்கிற பட்டினத்தார்.
“பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் -
ஆருந் துறக்கை யரிது “ - ஸ்ரீ தாயுமானவசுவாமிகள்
பட்டினத்தார் பாடல்கள்
( பத்திரகிரியார் பாடல்கள் உள்பட )
( விருத்தி உரை )
தி.ரு.வி.க.
பழனியப்பா பிரதர்ஸ்,
25, பீட்டர்ஸ் சாலை,
சென்னை-14
முதற்பதிப்பு-2001விலை.ரு.110/-
0 comments:
Post a Comment
Kindly post a comment.