Monday, November 5, 2012

எல்லாமே திருவருளால்தான் நிகழும் !- தெய்வத்திரு. திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் !

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 19-ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து,
அவர்தம் குருவருளைப் பெற்றிடச் சிந்திப்போமாக !        06-11-2012



நாம் எண்ணிய எண்ணப்படி எதனையும் செய்துவிட முடியாது. எல்லாம் இறைவன் ஆணையின் வண்ணமே நடக்கும்.

   அவையே தானே யாயிரு வினையில்
   போக்கு வரவு புரிய ஆணையின்
   நீக்கம் இன்றி நிற்கும் அன்றே. - சிவஞான போதம்.

மனிதன் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பானானால் கீழ் மேலிராது. வாயு தேவன் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாமல் வாடியதும், அக்கினி தேவன் அத்துரும்பை எரிக்க முடியாது இளைத்ததும், இந்திரன் அசைவற்று அலைக்கணுற்றதும் கேநோபநிடத்தால் புலனாகிறதன்றோ ? 

எல்லாந் தன்னாலேயே ஆகின்றன என்று எண்ணி இறுமாந்து சிலர் திரிகின்றனர். இதனை முடிக்க வேண்டும், இதனை ஈட்ட வேண்டும் என்று பலகாலும் முயன்று நிற்பினும் அவை முடியாமற் போகின்றன.

சில விஷயங்களில் முயற்சியின்றி வாளா இருப்பினும் அவை வந்து முன்னே நிற்கின்றன. தேடிக்கொண்டு போகும் பொருள் கிடையாமல் திகைப்பதும், தேடாத பொருள் தெருவில் வந்து கிடைப்பதும் கண்கூடு.

      வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
      தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

என்றார் பொய்யிற் புலவர். ஆதலினால், “இதை இப்படி முடிக்க வேண்டும், அதை அப்படி முடிக்க வேண்டும்” என்று மனக்கோட்டை கட்டக் கூடாது. திருவருளை முன்னிட்டு எதனையுஞ் செய்தல் வேண்டும். இறைவனுடைய இன்னருள் துணை செய்து முடித்துக் கொடுக்கும். இவ்வுண்மையை அடியிற்காணும் எடுத்துக்காட்டால் கண்டு தெளிமின்.                                     

கரிய நிறமும், பெரிய திறமும், திரண்ட புயமும், இருண்ட மனமும், மருண்ட சினமும் உடைய  ஒரு வேடன் இருந்தான். அவ்வேடன் ஒரு நாள் காட்டை வளைது வேஐயாடி மத யானையைக் கண்டான். அதனைக் கணையால் எய்திக் கொள்ளும் பொருட்டு ஒரு புற்றில் மறைந்து நின்றான். யானை அருகில் வந்ததும் கணை தொடுத்துக் கொன்றான். யானை வீழ்ந்து மாய்ந்தது. அதுசமயம், அவன் காலடியில் மிதியுற்று நொந்த ஒரு  நாகம் சீறி அவனைக் கடித்தது. அதனால் வருந்திய வேடன் வெகுண்டு அப்பாம்பையும் ஒரு பாணத்தால் கொன்றான். சிறிது நேரத்திற்குள் விடந்தலைக்கேறி வேடன் இறந்தான்.                                                                                                                     


 இங்கனம் யானை, வேடன், பாம்பு மூன்றும் இறந்து கிடந்தன. அங்கு நரி ஒன்று வந்து சேர்ந்தது. பசியால் வாடி இரையை நாடி வந்த அந்த நரி, இறந்து கிடந்த மூன்று பிணங்களையும் கண்டு “நமக்கு நல்ல உணவு கிடைத்தது” என்று உள்ளம் மகிழ்ந்தது. “ஆகா என்ன அதிர்ஷ்டம்? என்னைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யார் ? உலகில் ஒருவனுக்கு ஏதாவது ஒரு சிறந்த பொருள் கிடைத்தால், ’நரி முகத்தில் விழித்தனையோ’ என்பர். இப்போது நாம் யார் முகத்தில் விழித்தோம் என்று கூறுவது ? எவ்வளவு பெரிய பாக்கியங் கிடைத்தது? என் வயிறு செய்த புண்ணியந்தான் யாதோ?” என்று எண்ணி அளப்பற்ற ஆனந்தமுற்று ஆடிப் பாடியது.                                                     

பின்னர் நரி அம்மூன்று பொருள்களையுஞ் சுற்றிச் சுற்றிப் பார்த்து “இந்த யானை 6 மாதங்களுக்கும், இம்மனிதன் 3 நாட்களுக்கும், இந்த நாகம் 2 நாட்களுக்கும் உணவாகும்க். எனவே, 185 நாட்களுக்கு உணவைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. வெகு சுகமாகத் தின்று கொண்டிருக்கலாம். ஆனால், இந்த வேடன் கையில் உள்ள வில்லின் நாணை முதலில் கடித்துத் தின்போம். அது ஒரு பாதி வயிற்றுக்கு உணவாகும். அதைத்தான் ஏன் விட்டு விட வேண்டும் ?” என்று எண்ணியது. அதற்கிருந்த மகிழ்ச்சிக்கு வரம்பே இல்லை. ஒரு குதி குதித்து ஓடி வேடன் கையிலிருந்த வில்லின் நாணைக் கடித்தது. கடித்தலும் வில்முனை விரைவில் நிமிர நரியின் தலை நறுக்குண்டு விழுந்தது. நரி தான் எண்ணிய எண்ணமெல்லாம் அடிமாண்டு இறந்தது.

ஆதலினால், நமது எண்ணம் எண்ணியபடியே ஈடேற மாட்டாது. எல்லாம் திருவருளாலே நிகழும்.

    கரியொரு திங்க ளாறும் கானவன் மூன்று நாளும்
    இரிதலைப் புற்று நாகம் இரண்டுநாள் இரையாமென்றே
    விரிதலை வேடன் கையின் விற்குதை நரம்பைக் கவ்வி
    நரியனார் பட்ட பாடு நாளைநாம் படவே நிற்போம்.                                    




வாரியாரின் சிறுகதைகள்,

வெளியீடு
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
107, சிங்கண்ண செட்டித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002.





0 comments:

Post a Comment

Kindly post a comment.