Thursday, November 15, 2012

”கருணைக்கு அருணகிரி” மற்றும் வில்லிபாரதம் பிறந்த கதை !

 நன்றி :-

 http://www.adiyaar.com/Arunagirinathar.aspx

 வக்கபாகை எனும் ஊரில் வாழ்ந்து வந்த வில்லிபுத்தூரார் என்ற பெரும் புலவர், பல புலவர்களிடம் புலமைப் போட்டியில் ஈடுபட்டு வந்தார். போட்டியின் போது, வில்லிபுத்தூரார் கைகளில் துரட்டு ஒன்று வைத்திருப்பார். அந்த துரட்டு, போட்டிக்கு வந்த புலவரின் காதில் மாட்டப்பட்டிருக்கும். வில்லிபுத்தூரார் கேட்கும் கேள்விகளுக்குப் புலவர் பதில் கூற வேண்டும், தவறினால், தமது கைகளில் உள்ள துரட்டினை இழுத்து காதுகளை அரிந்து விடுவார். இந்தப் போட்டியில், பல புலவர்கள் வில்லிபுத்தூராரை வெல்ல இயலாமல் தமது காதுகளை இழந்தனர். 

இதை அறிந்த அருணகிரிநாதர், இந்தக் கொடுமையைத் தடுக்க எண்ணி வில்லிபுத்தூராரிடம் சென்று, போட்டியில் ஈடுபட்டார். அப்போது அருணகிரிநாதர் தமது கைகளிலும் துரட்டு அளிக்கப்பட வேண்டும் எனவும், தாம் பாடும் அந்தாதி ஒன்றிற்கு, வில்லிபுத்தூரார் பொருள் கூறினால், தாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் தமது காதுகளை வில்லிபுத்தூரார் அரியலாம் என்றும், தவறினால் வில்லிபுத்தூராரின் காதுகளை, தமது துரட்டினால் அரிய நேரிடும் என்றும் நிபந்தனை விதித்தார். 

வில்லிபுத்தூராரும் அதற்கு ஒப்புக் கொண்டார். இருவரது கைகளிலும் துரட்டு வழங்கப்பட்டு, எதிராளியின் காதுகளில் துரட்டினைப் பூட்டினர். அருணகிரிநாதர் பின்வரும் பாடலை பாடினார்.


திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

இதற்குப் பொருள் கூற முடியாமல், வில்லிபுத்தூரார் தோல்வியை ஒப்புக் கொண்டார். தோல்வி அடைந்த போதும், வில்லிபுத்தூராரின் காதுகளை அரியாமல், இந்தப் புலமைப் போட்டியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுமாறு வில்லிபுத்தூரார்க்கு அறிவுரை வழங்கினார்.

வில்லிபுத்தூராரும் தமது தவறினை உணர்ந்து அருணகிரிநாதரை வணங்கினார். இதனால், "கருணைக்கு அருணகிரி" என்று அருணகிரிநாதர் போற்றப்பட்டார். வில்லிபுத்தூரார் தமது தவற்றிற்குப் பரிகாரமாக மகாபாரதத்தை, "வில்லிபாரதம்" என்ற பெயரில் தமிழில் எழுதினார்.

இந்தப் பாடலின் பொருளைத் திருமுருக குக கிருபானந்த வாரியார் 

சுவாமிகள் பின்வருமாறு விளக்குகிறார்.

திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,

திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,

தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,

தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,

துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,

தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,

தா: முதுகாகிய இடத்தையும்,

தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,

தத்து: அலை வீசுகின்ற,

அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக்
               கொண்டு     

ததி: ஆயர்பாடியில் தயிர்,

தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,

து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),

துதித்து: போற்றி வணங்குகின்ற,

இதத்து: போரின்ப சொரூபியாகிய,

ஆதி: மூலப்பொருளே,

தத்தத்து: தந்தங்களை உடைய,

அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,

தத்தை: கிளி போன்ற தேவயானையின்,

தாத: தாசனே,

திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,

தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,

அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,

தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)

அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),

தீ: அக்னியினால்,

தீ: தகிக்கப்படும்,

திதி: அந்த அந்திம நாளில்,

துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,

தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.