Friday, November 30, 2012

ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் "சைபராபாத்' ஆகியுள்ளது.- பான்கி-மூன்- ஐ.நா. பொதுச் செயலர்

இந்தியத் தயாரிப்பான "ஆகாஷ் -2 டேப்லெட்' கணினி, ஐக்கிய நாடுகள் சபையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் தயாரிப்பாளரான டேடாவிண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுநீத் சிங் துலி, ஆகாஷ் டேப்லெட் கணினியை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி-மூனிடம் அளித்தார். இக்கணினியின் சிறப்புக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பை இப்போது இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி ஆகாஷ் டேப்லெட்டை மற்ற உறுப்பு நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் கணினியைப் பெற்றுக் கொண்ட பான் கி-மூன் கூறியதாவது:÷இக்கணினி கையடக்கமாக, கொண்டு செல்வதற்கு எளிதாக உள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதைப் போன்று தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதன்மையாகத் திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வலிமை மிகுந்த நாடாக இந்தியா உள்ளது.

அதனால்தான், ஹைதராபாத் போன்ற இடங்களெல்லாம் "சைபராபாத்' என அழைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஆகாஷ் என்றால் ஹிந்தி மொழியில் வானம் என்று அர்த்தம். வானத்தை எட்டிப்பிடித்து தங்களது கனவுகளை அடைய துடிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து அனைத்து நாடுகளும் செயல்படவேண்டும்.

தகவல் தொடர்பும், தொழில்நுட்பமும் பொருளாதார மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. இவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க முடியும்.

அதே சமயம் நவீன தொழில்நுட்ப வசதியை பெற முடியாதவர்களுக்கு, அதை கிடைக்கச் செய்வதற்கு நாம் உதவ வேண்டும்'' என்றார் பான் கி-மூன்.

பின்னர் இது தொடர்பாக "ஆகாஷ் டேப்லெட்' கணினிகளைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள டேடா விண்ட் நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி சுனீத் சிங் துலி, பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறியதாவது:÷""ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் இக்கணினியில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இந்தக் கணினி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல என்ற சர்ச்சை கடந்த சில நாள்களாகக் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இது ஒரு இந்திய தயாரிப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

அதே சமயம், அதன் பாகங்கள் பிற நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ளன. கணினிக்கான "டச் ஸ்கிரீன்' கனடாவிலும், "மதர் போர்டு' சீனாவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இறுதியாக கணினியை ஒருங்கிணைத்து, மென்பொருள் உள்ளீடு செய்யும் பணி இந்தியாவில் நடைபெற்றது. இதற்கென இந்தியாவில் 6 இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம்'' என்றார்.

"ஆகாஷ்' கணினியை ஐ.நா.வில் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்த ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி கூறுகையில், ""இக்கணினியை தயாரிக்க சர்வதேச ஒப்பந்தத்தைக் கோரியபோது, முழுக்க முழுக்க இந்தியாவில்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்று எந்தவிதமான நிபந்தனையையும் மத்திய அரசு விதிக்கவில்லை. இந்நிலையில், அதன் சில பாகங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது'' என்றார்.                                                                                                           

நன்றி :- தினமணி, 30-11-2012                                                                                                   





0 comments:

Post a Comment

Kindly post a comment.