Tuesday, November 20, 2012

சிவகங்கையில் ரூ.90 கோடியில் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி !

தமிழகத்தில் முதன் முதலாகச் சிவகங்கையில் ரூ.90 கோடி செலவில் சூரிய ஒளி மூலம் 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ஸ்வெலக்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்னுற்பத்தி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளது.

இது தொடர்பாக ஸ்வெலக்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.செல்லப்பன் கோவை செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:

நியுமெரிக் பவர் சிஸ்டம் என முன்பு அழைக்கப்பட்ட ஸ்வெலக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் (ஸ்வீஸ்) லிமிடெட், இப்போது மரபுசாரா எரிசக்தியில் குறிப்பாக சோலார் போட்டோவோல்டிக் பொருள்கள் உற்பத்தியில் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் முதன் முதலாக சிவகங்கையில் சூரிய ஒளி மூலம் 10 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்கு 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் தலா 10 மெகாவாட் வீதம் சூரிய ஒளி மூலம் மின்னுற்பத்தி செய்யவும் ஸ்வீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சூரிய ஒளியைக் கவரும் மென்திரை (தின் பிலிம்) தொழில்நுட்பம் விலை குறைவானது. ஆனால் அதிக இடம் தேவைப்படும். ஆனால் மோனோகிரைஸ்டலின் தொழில்நுட்பம் சற்று விலை அதிகம். ஆனால் குறைந்த இடம் இருந்தால் போதும். அதிக அளவில் மின்னுற்பத்தி செய்ய முடியும்.

சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின்னுற்பத்திக்கு யூனிட்டுக்கு ரூ.8 வரை செலவாகும். 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் முதலீட்டை எடுக்க முடியும்.

அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க முடியும். அதன்பின் சூரிய ஒளியைக் கவரும் பேனல்களை மாற்ற வேண்டும் என்றார் செல்லப்பன்.

தமிழக அரசு முதலீடு செய்யுமா?

தனியார் நிறுவனம் ரூ.90 கோடி செலவில் சிவகங்கையில் 10 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும்போது தமிழக அரசு முதலீடு செய்ய வேண்டும் என்று தொழிலதிபர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் வரும் 2015-ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மூலம் கூடுதலாக 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சுமார் ரூ.9 கோடி வரை செலவாகிறது. 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.27 ஆயிரம் கோடி தேவை.

தனியார் நிறுவனங்கள் மின்சாரம் உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதற்குப் பதிலாக அரசே மின்னுற்பத்தியில் ஈடுபட்டால் இந்தப் பிரச்னை இருக்காது.

கூடுதல் மின்சாரம் இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்கவும் வாய்ப்புள்ளது என தொழிலதிபர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.                                          
நன்றி :-தினமணி, 20-11-2012                         






0 comments:

Post a Comment

Kindly post a comment.