Friday, September 21, 2012

நல்லதொரு குடும்பத்துக்கு நாலு வழிகள் - தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அப்துல் கலாம் அறிவுரை !

நல்லதொரு குடும்பத்துக்கு 4 வழிகள்

உலகமயமாக்கல் சூழ்நிலையில் சமுதாய மறுமலர்ச்சிக்கு, வளர்ச்சிக்கு 
மகிழ்ச்சியான நல்ல குடும்பம் மிகவும் முக்கியம். அதற்கு ஒரு சமன்பாட்டை 
உருவாக்கியிருக்கிறேன். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பம்தான் தமிழ்ச் சமுதாய  மேம்பாட்டிற்கு அடிப்படையாகும்.

மகிழ்ச்சியான நல்ல குடும்பம் என்பது ஆன்மிகக் குடும்பம், சந்தோஷம் மிக்க தாய், வாய்மையான தந்தை, தூய்மையான பசுமை வீடு ஆகியவை சேர்ந்தது ஆகும்.

நாம் ஒரு சின்ன குடும்பத்தை எடுத்துக்கொள்வோம்.

ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, இரண்டு மகன்கள், ஒரு மகள் அல்லது இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று எடுத்துக்கொண்டால், இன்றைய சூழ்நிலையில், வாழ்க்கையை நல்ல மேம்பாட்டுடன் நடத்துவதற்கு கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இன்றைக்கு பல குடும்பத்தில் குழந்தைகளோடு பேசி மகிழ்வதற்கு நேரமில்லை

வேலைப் பளு மற்றும் தொலைக்காட்சி நமது பொன்னான நேரத்தை ஆக்கிரமிக்கிறது. எனவே பெற்றோர்கள், குழந்தைகளுக்கு உதாரணமாக தங்களது வாழ்க்கையை முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்தக் குடும்பத்தில் ஒரு சிறிய பிராத்தனை அறை இருக்க வேண்டும்,
குறைந்தது 10 புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகம் இருக்கவேண்டும்.
ஒரு வேளையாவது, குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து உணவருந்த வேண்டும்.

அந்த நேரத்தில் படித்த, பார்த்த நல்ல சம்பவங்களை, குழந்தைகளுக்கு கதை போல சொல்லிக்கொடுக்க வேண்டும்.இப்படிப்  பல வகைகளில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நல்ல கருத்து பரிமாற்றம் நிகழும். அன்பு பிறக்கும். பாசம் வளரும். அறிவுப் பரிமாற்றம் நிகழும். குடும்பத்தில் தெய்வீகம் பிறக்கும். அமைதி பிறக்கும்.

 அப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள், நம்பிக்கையுடன் உருவாகும், சுயமரியாதையுடன் வாழப் பழகும். தான் செய்யும் அனைத்து செயல்களையும் ஒரு தனித்தன்மையுடன் செய்யவேண்டும் என்ற உணர்வுடன் வளரும். அதைச் செயல்படுத்தும். எனவே இப்படிப்பட்ட ஆன்மிகக் குடும்பம் முதலில் உருவாக வேண்டும்.

இரண்டாவது சந்தோஷம் மிக்க தாய். இது நான் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்லும் விஷயம்.(இவ்வாறு கூறிவிட்டு, சில வாசகங்களைக் கூறி அதை இளைஞர்கள் திரும்பக் கூறும்படி செய்தார் கலாம்)

இன்று முதல், நான் தாயின் முகத்திலும், அகத்திலும் மகிழ்ச்சியை 

உருவாக்குவேன்.

என் தாய் மகிழ்ச்சியாக இருந்தால், என் வீடு மகிழ்ச்சியாக இருக்கும்.

என் வீடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக 


இருக்கும்.

இந்த சமுதாயம் மகிழ்ச்சியாக இருந்தால், தமிழ்நாடு மகிழ்ச்சியாக 


இருக்கும்.

தமிழ்நாடு மகிழ்ச்சியாக இருந்தால், இந்தியா சந்தோஷமடையும்.


அடுத்தது வாய்மையான தந்தை. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று சொல்வதுண்டு. தந்தைதான் அறிவையும், ஆற்றலையும், தைரியத்தையும் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும். தந்தைதான் குழந்தைகளுக்கு முதல் ஹீரோ. குழந்தை வளரும் போது தந்தையைப் பார்த்துத்தான் வளர்கிறது. தந்தைதான் வாய்மையாக நடந்து காட்டவேண்டும். நேர்மையாக வாழ்ந்து காட்டவேண்டும். விவேகத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒர் எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

அப்படிப்பட்ட வாய்மையான தந்தைதான் இன்றைய சூழ்நிலையில், இளைய சமுதாயத்தைப் பண்படுத்த முடியும். வாய்மையான தந்தைதான் மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்.

இறுதியாக தூய்மையான பசுமை வீடு. பூமியின் தட்பவெப்பநிலை மாறி வருகிறது. மரங்களை வெட்டுவதும், தொழிற்சாலைகள், போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ûஸடு காரணமாக ஒசோன் படலத்தில் ஒட்டை விழுந்து பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால், இன்றைக்கு மழை பொய்த்து வறட்சி, வெள்ளம் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இளைஞர்கள் நினைத்தால் இந்த சூழ்நிலையை மாற்ற முடியும். ஒவ்வொருவரும் ஒரு மரம் நட வேண்டும்.

ஒரு மரம் 20 கிலோ கிராம் கார்பன் டை ஆக்ûஸடை ஓரு வருடத்திற்கு உள் வாங்கி அழிக்கிறது. 14 கிலோ கிராம் எடையுள்ள ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்நாளில் 10 மரங்கள் நட்டு அதைப் பாதுகாத்தால், ஆயிரம் கோடி மரங்களை நாம் நடுவோம்.

அப்படி மரங்களை நாம் நட்டால் இந்தியாவில் மாறிவரும் தட்ப வெட்ப சூழலை சமாளித்து, நமது எதிர்கால வாழ்க்கையை வளப்படுத்த இயலும். மரம் வளர்ப்பது மட்டும் அல்ல, வீட்டை மட்டுமல்ல, தெருவையும் சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அப்துல் கலாம்.   



அனைத்திந்திய அளவில் இயங்கிவரும் தமிழ்ச் சங்கங்களை ஐக்கியப்படுத்தும் முயற்சியில், புது தில்லித் தமிழ்ச் சஙகம் முதலடி எடுத்து வைத்துள்ளது.. முதல் முயற்சியிலேயே பெரும் வெற்றியும் கண்டுள்ளது. அடுத்த ஆண்டு புதுதில்லியில் அனைத்துலகத் தமிழ்ச்சங்க மாநாட்டை நடத்திடவும் உறுதி பூண்டுள்ளனர் பலருக்கும் நம்பிக்கையும் உள்ளது.

புதுதில்லியை நோக்கிப் படையெடுத்த இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் அன்பர்களை ரெயில் நிலையங்களிலேயே வரவேற்று, தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இராமகிருஷ்ணாபுரம், ஐந்தாவது செக்டாரில் அமைந்துள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தில். காலைச் சிற்றுண்டி, நண்பகல் உணவு, இரவு உணவு- பஃபே முறை -யில் வயிற்றுக்கும் உணவீந்து, செவிக்கும் சுவைமிகு கலை இலக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மகிச்சியூட்டிய, தில்லித் தமிழ்ச் சங்கத்தினரை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்..

நிகழ்வில் கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் வலைப் பதிவர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.