Sunday, September 2, 2012

குறை சொல்வீர் ! பரிசினை வெல்வீர்! - ஃபக்கூகிள் அறிவிப்பு !


குமுதம் போன்ற அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கைகள் தங்களைப் பற்றி யாராவது திட்டி எழுதினாலும் அதை அப்படியே பிரசுரித்து அதையும் ஒரு விளம்பரமாக்கிக் கொள்ளும்.

சென்னையில் 365 நாளும் 24 மணி நேரமும் இயங்கும் நிறுவனம் ஒன்று உண்டு. எங்கே இருக்கின்றது, என்ன செய்கின்றது என்று கேட்கின்றீர்களா? எழும்பூரில் கென்னட் லேனை அறியாதவர்கள் இருக்க முடியாது. எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து க்ர்ன்னட் லேனுக்குள் சென்றால், வலப்புறம் நான்காவதாக இருக்கும், மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தைச் சொல்லுவதற்குத்தான் இவ்வளவு பீடிகை.

 ”பரிதாப முதலியார் சரித்திரத்தை” எழுதத் துவங்குவதற்கு முன்பு, இன்னம்பூரார் எழுதிய முன்னோட்டம் போன்றுதான்  என்று எடுத்துக் கொள்ளுங்களேன். டிராவல்ஸ் என்றவுடன் ஏதாவது ஆம்னி பஸ்களுக்கு / டிரெயின்க்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் நிறுவனம் என்று சாமான்யமாக எண்ணி விடாதீர்கள். விண்ணில் நாடுவிட்டு நாடு செல்லப் பறந்திடுவோருக்குப் பயணச்சீட்டுக்களை எடுத்துத் தரும் நிறுவனம். அந்த நிறுவனத்திற்குள் சென்றால், கண்னில் படும் ஒரு வாசகம், நம் கருத்தினை ஈர்க்காமல் இருக்க முடியாது.

“எங்கள் தவறுகளை 

எங்களிடம் சொல்லுங்கள்; 

திருத்திக் கொள்கிறோம்“ 

என்பதுதான் அது.


அதே போன்றதொரு வாய்ப்பினை, நம் எல்லோருக்கும், ஏற்படுத்தித் தந்திருக்கின்றது Bug Google நிறுவனம். இதற்குப் பெரிதாகப் பொறியியல் அறிவோ / மென்பொருள் கையாளும் திறனோ / சாஃப்ட்வேர் நுணுக்கங்களோ தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திருமண வீட்டில் விருந்துண்டபின், எல்லாம் நன்றாக இருந்தது, பாயாசத்தில்தான் உப்புப் போதாது என்று சொல்லக் கூடிய அளவு திறமை மட்டும் இருந்தால் போதுமானது.

எல்லோரும் எல்லாச் செய்திகளையும் விட்டுவிடாமல் இணையத்தில் பார்த்துவிட முடியாது. vallamai.com இணையதளம் நடத்துபவர்கள் அவர்கள் குறிக்கோள் என்னவோ அந்தத் தடம் மாறாமல்தான் பயணித்துக் கொண்டிருப்பர். அதுதான் நல்லதும் கூட. ஆனால், என் எண்ணமோ வேறு. எனக்குத் தெரிந்தவற்றை எல்லோருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பது. கேட்பவர்கள் எந்த ”மூடில்” இருக்கின்றார்கள் என்று கூடக் கவலைப்பட மாட்டேன். உதாரணத்திற்கு ஒன்று சொல்லலாம்.

ஆழ்வார்களுள் ஒருவரான இரமானுஜருக்கு, அவருடைய குரு ஓர் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்துவிட்டு, இதை வெளியே சொன்னால் உன் தலை சுக்குநூறாகும் என்றும் அச்சுறுத்தியும் விட்டார். ஆனால், எதற்கும் கவலைப்படாத இராமனுஜர் கோபுரத்தின் மீதேறி நின்று கொண்டு,  ( சுஜாதாவின் சொந்த ஊரான ஸ்ரீரஙகம்தான் என்று நினைவு ) ”ஓம் நமோ நாராயணா“  என்று சொல்லுங்கள். உலகக் கவலைகளை எல்லாம் வென்றுவிடலாம் என்று சொன்னதைப் போல் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்.


தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள தமிழ் வலைப்பதிவருக்குக்கூட இது சென்றடைந்து, எல்லோரும் பங்குபெற்று, யாருக்காவது Bug Google -ல் இருந்து பரிசு கிடைத்தால் நிச்சயமாகப் பங்குக்கு வரமாட்டேன். தகவல் தந்தால் மகிழ்வேன்.

பெரிய விதி முறகள் எல்லாம் கிடையாது. எல்லா நாட்டவரும் பங்கேற்கலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் கூகிளில்  எனக்குப் பிடிக்காத விஷயம் இவைஇவை என்று சுட்டிக் காட்டலாம். பள்ளி/ கல்லூரி மாணாக்கர்கள் படிக்கும் விபரங்களுடன் தங்களுக்குக் கூகிளில் பிடிதமில்லாத விஷயங்களை எல்லாம் பட்டியலிடலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.

என்ன அது? 12-10-2012 நள்ளிரவு 12 மணீக்குள் உங்களுடைய மின்னஞசல் அவர்களுக்குச் சென்று சேர்ந்திடவேண்டும், அவ்வளவுதான். நுழைவுக்கட்டணம் எதுவும் கிடையாது.

முதல் / இரண்டாவது / மூன்றாவது பரிசென்ற வரைமுறை எல்லாம் கிடையாது. சிறப்பாகக் குறை கூறுபவர்களுக்கு / கூகிளில் உள்ள பிடிக்காத விஷயங்களைச் சொல்பவர்கள் எல்லோருக்குமே பரிசு உண்டு.

கூகிளைப் பயன்படுத்துவோரின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொள்வதுதான் கூகிளின் நோக்கமாக இருக்கக் கூடும்.

இதற்கும் மேல் ஐயம் ஏதேனும் இருந்தால், Bugoogle.com சென்று பார்த்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

கன்னியாகுமரியைத் தமிழ் நண்பர்கள் வினோத் கவனித்துக் கொள்வார்.


மற்றவர்களை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். வல்லமை ஆசிரியர் 
பவள சங்கரி மறுக்காமல் பிரசுரிப்பார் என்ற நம்பிக்கை உண்டு. 
மின் குழுமமும் மறுக்காது என எண்ணுகிறது மனம்.

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி:-  contest@buggoole.com

வெற்றிபெற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

(வாழ்த்துகள்; கருத்துகள் என்றெல்லாம் எழுதுவது தவறு. உரியோரிடம் கேட்கப்பட்டுவிட்டது )



0 comments:

Post a Comment

Kindly post a comment.