Friday, September 16, 2011

பாரதி அன்று சொன்னது ! சுப்ரீம் கோர்ட் இன்று செய்தது!

பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, "மக்கள் சிவில் லிபர்டி' என்ற அமைப்பின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டில், பட்டினி காரணமாகவோ, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே, ஒருவர் கூட இறக்கக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு தேவையான உணவுப் பொருட்களை, பொது வினியோகத் திட்டத்தின் மூலம், அரசு வழங்க வேண்டும்.

பட்டினிச் சாவுகள் நடக்காமல் இருப்பதற்கு, கூடுதலாக எவ்வளவு உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தகவல்களை, ஒவ்வொரு மாநில அரசும், இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். அப்படி பதில் அனுப்பாத மாநிலங்களில் பட்டினிச் சாவு இல்லை என்று முடிவு செய்யப்படும். பொது வினியோகத் திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். பொது வினியோகத் திட்ட நடைமுறைகள் முழுவதும், வெளிப்படையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான முந்தைய விசாரணையின் போது, "தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு, இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களும் இந்த திட்டத்தை முன் மாதிரியாகக் கொண்டு பின்பற்றலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்-
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

0 comments:

Post a Comment

Kindly post a comment.