Tuesday, August 16, 2011

விசா-பாஸ்போர்ட் இல்லாமல் சென்னையில் ஓர் கடற்பயணம்!


மனித மனம் வேறுபட்ட அனுபவங்களயே விரும்புகின்றது. சுற்றுலாக்களை மேற்கொள்வதற்கான பல காரணங்களுள் இதுவே தலையாயது. இயற்கைச் சீற்றங்களால் கடற்கோளூம், நில நடுக்கங்களும் ஏற்பட்டாலும், அதிகமான விபத்துக்களைப் பற்றிய செய்திகளைப் படித்தாலும், பார்த்தாலும் பயணம் மேற்கொள்ள அஞ்சுவதில்லை. பத்ரிநாத், கேதாரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி (கங்கை-யமுனை உற்பத்தி இடங்கள்), வைஷ்ணவதேவி தரிசனம், அமரநாத் பயணங்கள் தீவீர வாதிகளின் அச்சுறுத்தல்களயும் பொருட்படுத்தாமல் தொடர்கின்றன.

தமிழகத்திலிருந்து கடல்-விமானப் பயணங்களுக்குக் கடவுச் சீட்டு இல்லாமல் பயணித்திட அந்தமானைத் தேர்ந்தெடுக்கலாம். ப்யண அனுபவங்கள் சுவையாகவே இருக்கும்.

முன்னதாகத் திட்டமிட்டு பணச்சீட்டுக்களை விமானத்தில் பதிவு செய்தால், அந்தமான் செல்வதற்கான பயணக் கட்டணத்திலேயே சிஙகப்பூர் சென்று திரும்பலாம். ஆனால், கடவுச் சீட்டு வேண்டும். சிங்கப்பூர் சென்று விட்டு மலேசியாவை விட்டு வைக்கலாமா? செலவு சற்று அதிகமாகும். அங்கே நண்பர்கள் அல்லது உறவினர்கள் இருந்து , தங்குமிடம் இலவசமாகக் கிடைத்துவிட்டால் செலவு குறையும். ஆனால், முன்னதாகவே திட்டமிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் என்றால் பரவாயில்லை. ஒரே வாடகை வீட்டில், இரண்டு மூன்று குடும்பங்கள் சமையல் அறையை ஷிஃப்ட் முறையில் பங்குபோட்டுக்கொண்டு வாழ்க்கை நடத்துவதைப் பார்த்தால் பணம் ஈட்ட நம்மவர் படும்பாடு உள்ளத்தை வருத்தும்.

இந்தத் தொல்லை எல்லாம் இல்லாமல் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றிட ஆடம்பரக் கப்பல் பயண வசதி ஒன்று சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. விடுமுறை எடுக்கவேண்டாம். விசா தொல்லை இல்லை. கடவுச் சீட்டு தேவையே இல்லை. அந்தமான் அல்லது சிங்கப்பூருக்குக் கடலில் சென்று வந்த பயண அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் சென்னையிலேயே பெறலாம்.

இந்த உல்லாசக் கப்பல் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இந்தக் கப்பல் இயக்கப் படுகின்றது. வெள்ளி, சனி, ஞாயிறு. முதல்நாள் மாலை நான்கு மணிக்குக் கப்பல் புறப்பட்டால், மறுநாள் காலை 11மணிக்கு திரும்ப வந்துவிடலாம்.

தனிநபருக்கு6000ம் ரூபாய். தம்பதியருக்கு6901தான். கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து சலுகைக்கட்டணம். மாணாக்கருக்கு250தான். கப்பல் குறித்த சகல விபரங்களும், வேலைவாய்ப்புக் குறித்த தகவல்களும், சிற்றுண்டியும் மாணாக்கர்களுக்கு உண்டு. இந்தக் கப்பலில் நாம் 50கடல்மைல்தூரம் பயணிக்க முடியும்.

முற்றிலும் குளிர்சாதன வசதி உண்டு. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட உல்லாசக் கப்பல் இது. அய்ந்து நட்சத்திர உணவு விடுதிக்குரிய அனைத்து வசதிகளும் உண்டு. திருமணங்கள், நிச்சயதார்த்தங்கள், குடும்ப விழாக்கள், கருத்தரங்கங்கள் என்று எவை வேண்டுமானாலும் கப்பலுக்குள் நடத்திக் கொள்ளலாம்.

சென்னை ,கிழக்குக் கடற்சாலையில் இயங்கும் உல்லாச விடுதிகளுக்குச் சரியான போட்டியாக இந்தக் கப்பல் இருக்கும். மென்பொருள் பணியாளர்கள் இனிமேல் இந்தக் கப்பலில்தான் விடுமுறை நாட்களைச் செலவிட விரும்புவர். இனிமேல் சென்னைத் துறைமுகத்தின் 7வது நுழைவாயிலில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

இதனை நடத்துவது ஓர் பன்னாட்டு நிறுவனம் என்பதும், ஈட்டும் லாபம் அவர்களைச் சென்றடையும் என்பதுவும் யோசிக்க வேண்டிய விஷ்யம். அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிக் கடன்கள் மூலமாகக் கடன்பெற்று அரசே இது போன்ற உல்லாசக் கப்பல் ஓட்டினால் நல்லதுதானே நண்பர்களே?

For details, call 26161438/ 32217887 or log in to ametcruises.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.