Thursday, October 29, 2015

பூமிக்கு 'பறந்து வரும்' ஆபத்து: நவ., 13ல் உலகம் அழியுமா?

விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மர்மப் பொருள், பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது, நவ., 13ம் தேதி இலங்கைக்கு அருகே விழப் போகிறதாம். இதனால் உலகம் அழியும் என்ற பீதி மீண்டும் கிளம்பியுள்ளது.

விண்வெளியில் இருந்து அடையாளம் தெரியாத 'டபிள்யு.டி.1190எப்' என பெயரிடப்பட்ட ஒரு மர்மப் பொருள் பூமியின் மேற்பரப்பை நோக்கி பறந்து வருவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 7 அடி நீளமுள்ள வளையும்தன்மையுடைய அந்த பொருள் விண்வெளியில் உள்ளகுப்பை, விண்கற்கள் அல்லது அப்பல்லோ விண்கலத்தின் ஒரு பாகமாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். 

வழக்கமாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருட்கள் வரும்வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடும். ஆனால், இந்த பொருள் எரியாமல் நேரடியாக பூமியின் மேற்பரப்பில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மர்ம பொருளை 2013ல் கேட்டலினா ஸ்கை சர்வே மூலம் முதன் முதலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

இதன் பின் விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது, வரும் நவ., 13ம் தேதி காலை 11.45 மணிக்கு இந்தியப்பெருங்கடலில் இலங்கையின் தென் பகுதியில் 65 கி.மீ., தொலைவில் கடலில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவே இருப்பதால் பாதிப்பு அரிதாகத் தான் இருக்கும். உலகம் அழிய வாய்ப்பு இல்லை. பூமி மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளதால், கடலில் எங்கு விழுந்தாலும் பாதிப்பு ஒன்றுமில்லை.


ஏன் கடினம்:விண்வெளியில் சுற்றி வரும் இம்மாதிரியான மர்மப் பொருட்கள் பற்றிய முழுமையான விவரத்தை கண்டறிவது மிகவும் கடினம்.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்(நாசா) வெளியிட்டுள்ள அறிக்கையில்,'விண்வெளியில் நுாற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் ஏவப்பட்டு சுற்றி வருகின்றன. 

இதில், காலாவதியான செயற்கைக்கோள்கள் செயல்பாட்டிலுள்ள செயற்கைக்கோள்களுடன் மோதுதல் உள்ளிட்ட காரணங்களால் விண்வெளி குப்பைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவை மணிக்கு 28,100 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகின்றன. அதுவும் 5 லட்சம் பொருட்கள் இந்த மாதிரி விண்வெளியில் உள்ளன. 

செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று மோதுவதை தடுப்பது கடினமான பணியாக உள்ளது. தற்போது விண்வெளி குப்பைகளை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்க உள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளது.

நன்றி :- தினமலர் 

0 comments:

Post a Comment

Kindly post a comment.