Monday, September 7, 2015

ஏன் இயலாது மதுவிலக்கு? – தடைகளைத் தகர்க்கும் வகைகளும், அமல்படுத்தும் முறைகளும் - இ.பு.ஞானப்பிரகாசன்



http://agasivapputhamizh.blogspot.com/2015/08/why-not-possible-alcohol-prohibition.html
Students Struggle

மூகநலக் கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி அணைந்த காந்தியவியலாளர் ஒருவரின் உயிர்த்தீ இன்று பெருநெருப்பாக மீள்தெறிப்புக் கண்டு தமிழ்நாடு முழுவதையும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது! 

நம் சமூகத்தில் எந்த ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமெனினும் யாராவது ஒருவரைப் பலி கொடுத்தாக வேண்டும்! தமிழினப் படுகொலை குறித்த விழிப்புணர்வுக்கு முத்துக்குமார் அவர்கள்; இராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்கச் செங்கொடி அவர்கள்; அவ்வளவு ஏன், இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கூட சங்கரலிங்கனார் அவர்களைப் பலி கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரிசையில் மதுவிலக்கு எனும் கோரிக்கையை வலியுறுத்தித் தன் உயிரையே விட்டிருக்கிறார் காந்தியவியலாளர் சசிபெருமாள் அவர்கள்! 

இன்றில்லை, நேற்றில்லை, ௪௬ (46) ஆண்டுகளாக, அதாவது ஏறத்தாழ 
Gandhist Sasiperumal
அரை நூற்றாண்டாக மதுவிலக்கை வலியுறுத்திப் போராடி வந்திருக்கிறார் சசிபெருமாள் ஐயா. இறுதியில், அந்தக் கோரிக்கைக்காகத் தன் உயிரையும் ஈந்து விட்டார். ஆனாலும், இன்று வரை, இதை நான் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடி வரை அவர் கோரிக்கை பற்றிப் “பரிசீலிக்கப்படும்” எனவோ, “விரைவில் முடிவெடுக்கப்படும்” எனவோ நாகரிகத்துக்காகக் கூட ஓர் அறிக்கை வெளியிட முன்வரவில்லை தமிழ்நாடு அரசு. குறைந்தது, அவரது இந்த ஈகைச் (தியாகம்) சாவு குறித்து நம் முதல்வர் அவர்கள் ஓர் இரங்கலறிக்கை கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனும் ஒரே காரணத்துக்காக, சமூகத்துக்கு இதுவரை ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாத எத்தனையோ பேர்களின் உயிரிழப்புக் குறித்து அன்றாடம் இரங்கல் அறிக்கை வெளியிடும் ஜெயலலிதா அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்காகப் போராடிப் போராடிக் கடைசியில் தன் உயிரையே விட்டவருக்கு இரங்கல் தெரிவிக்க மனம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சசிபெருமாள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடும்பத்தினரையும் அரசு கைது செய்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் விட்டது அட்டூழியத்தின் உச்சம்! 

ஆனால், அரசு எனும் இரும்பு இயந்திரத்தை அசைக்க முடியாத சசிபெருமாள் அவர்களின் ஈகை, மக்கள் மனத்தை உருக்கி விட்டது. இதோ, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இன்று பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளார்கள். ஆக, சசிபெருமாள் அவர்களின் கனவு நிறைவேறும் நாள் தொலைவில் இல்லை என நாம் நம்பலாம். 

ஆனாலும், தமிழ்நாடே திரண்டு போராடுகிறது என்பதற்காக நினைத்த மாத்திரத்தில்
டாரென எல்லா மதுக்கடைகளையும் சார்த்திப் பூட்டி விட முடியுமா? அது முடியும் என்றாலும் அப்படிச் செய்வது சரியா? அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் எவ்வளவு கடுமையாக இருக்கும்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? இவற்றையெல்லாம் பற்றி நடுநிலையான பார்வையில் சிறிய ஓர் அலசல் இதோ! 

மதுவிலக்குக்கு எதிரான தடைகளும் அவற்றைத் தகர்க்கும் வழிகளும் 


Crowd before Liquor Shop

மதுவிலக்குக்கு எதிராகப் பேசுபவர்கள் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் இரண்டு. அவற்றில் முதலாவது, கள்ளச்சாராயச் சாவுகள் பெருகும் என்பது. அஃது என்னவோ உண்மைதான். 

பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில், ‘கள்ளச்சாராயம் குடித்து இத்தனை பேர் பலி’, ‘கள்ளச் சாராயம் அருந்தியதால் இத்தனை பேருக்குப் பார்வை பறி போனது’ என்பன போன்ற செய்திகள் தமிழ்நாட்டில் அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெற்று வந்தன. கள்ளச் சாராயத்தை ஒழிக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் முடியாததால்தான் அதற்கு நிலையான ஒரு தீர்வு காணும் நோக்கில் (!) அரசே மலிவு விலையில் தரமான மதுவை விற்க முடிவெடுத்து டாஸ்மாக் எனும் அரசுப் பிரிவின் மூலம் அதைச் செயல்படுத்தியது. இந்த முறையற்ற முடிவு இன்று ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டது உண்மைதான் என்றாலும், மறுபுறம் அதனால் கள்ளச் சாராயம் என்பதே முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பதும் உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்! 

ஆனால், அதற்காகக் கள்ளச் சாராயத்தை ஒழிக்க அரசே நல்ல சாராயம் விற்பது என்பதை ஒருபொழுதும் ஏற்கவே முடியாது. கள்ளச் சாராயம் காய்ச்சுவது என்பது சட்டப்படி குற்றம். குற்றங்களை ஒடுக்கி மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அரசு என்கிற ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், குற்றத்தை ஒடுக்க வகையில்லாத அரசுதானே அந்தக் குற்றத்தை வீரியம் குறைந்த அளவில் செயல்படுத்துகிறேன் என இறங்குவது அருவெறுப்பானது! 

குண்டர் தடைச் சட்டங்களை அரசு மீண்டும் மீண்டும் எவ்வளவோ வலுப்படுத்திக் கொண்டுதான் வருகிறது. ஆனாலும், இதுவரை கூலிப்படைத் தாக்குதல்களையோ, போக்கிலிகளின் அடாவடித்தனங்களையோ, தாதாத்தனங்களையோ கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியவில்லை. அதற்காக அரசே குண்டர் படை ஒன்றை உருவாக்கி அரசியலாளர்களுக்கும் பணக்காரர்களுக்கும் குறைந்த வாடகைக்கு விட்டுக் குற்றங்களை அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்க் கொண்டு வந்து முறைப்படுத்தலாம் என இறங்கினால் நன்றாக இருக்குமா? அது போலத்தான் இதுவும். கொலை, கொள்ளை, வன்முறை, ஊழல், கையூட்டு போன்ற மற்ற குற்றங்களை ஒடுக்க அரசு எப்படிச் சட்டத்தின் மூலமாக மட்டுமே முயல்கிறதோ அதே போலத்தான் கள்ளச் சாராயத் தொழிலையும் அணுக வேண்டும்! 

உடனே சிலர், “இது வெறும் கொள்கை அளவிலான (theoritical) பார்வை. நடைமுறைப்படி (practically) பார்க்கும்பொழுது, அரசே நேரடியாக மது விற்பதால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடிந்திருக்கிறது எனில் அதைத் தொடர்வதில் என்ன தவறு?” எனக் கேட்கலாம். அப்படியே நடைமுறைப்படி பார்த்தாலும், அரசு விற்பதும் தரமான சாராயம்தானே தவிர அஃது ஒன்றும் பாலோ பழமோ காயோ கறியோ கிடையாது. கள்ளச் சாராயம் உடலுக்கு உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் எனில், நல்ல சாராயம் அதைத் தாமதமாக ஏற்படுத்தும்; இஃது உடனடியாகக் கொல்லும் எனில் அது தாமதமாகக் கொல்லும், அவ்வளவுதான். மற்றபடி, கள்ளச் சாராயம் மட்டும்தான் நஞ்சு அரசுச் சாராயம் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதம் என்பதில்லை. அளவுக்கு மீறிப் பெருகி வரும் இந்தக் குடிப் பழக்கத்தினால் இன்னும் சில ஆண்டுகளில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis) மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே, சாராயம் என்பதை அறவே ஒழிப்பதுதான் சாராய உயிரிழப்புகளுக்கும் குடிப் பழக்கத்தினால் ஏற்படும் இன்ன பிற குடும்ப, சமுதாயத் தீமைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியுமே தவிர, அரசே மது விற்பதன் மூலம் அது நடக்காது! 

மதுவிலக்குக்கு எதிராக முன்வைக்கப்படும் இரண்டாவது காரணம், அதுதான் இன்று அரசின் முதன்மையான வருவாயாக இருக்கிறது என்பது. 

இதுவும் உண்மைதான். வேளாண்துறை, தொழில்துறை, சேவைத்துறை ஆகிய மூன்று பிரிவுகளுமே நேரடியாகவோ மறைமுகமாகவோ மின்சாரத்தையே நம்பி இயங்கும் இன்றைய உலகில் மின்சார உற்பத்தியில் ஒப்புயர்வில்லாத அளவுக்குப் பின்தங்கியுள்ள தமிழ்நாடு, வருமானத்துக்கு நம்பியிருக்கும் முதல் பெரும் வழிவகை சாராய விற்பனை. அதையும் இழுத்து மூடிவிட்டால், ஏற்கெனவே கடனில் தள்ளாடும் அரசு தலைகுப்புறக் கீழே விழுந்து விடும் என்பதுதான் இன்றைய நிலை. ஆளுங்கட்சி அமைச்சர்கள் மட்டுமில்லாமல் மதுவிலக்கை விரும்பும் சமூக ஆர்வலர்களே கூட “மதுவிலக்கு என்பது இயலாத ஒன்று” என மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள் எனில் அதற்குக் காரணம் இதுதான். 

இதற்கு ஒரே வழி, தகுந்த மின்துறை வல்லுநர்களோடு கலந்துரையாடி மின்சாரத்துறை மீண்டும் புத்துயிர் பெறப் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுப்பதுதானே ஒழிய சாராயத்துறையையே சார்ந்திருப்பது இல்லை. 

மேற்கண்ட இரண்டு காரணங்கள் தவிர, மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதில் இன்னொரு பெரும் தடையும் இருக்கிறது. அது குடிகாரர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு! 

முன்பெல்லாம் குடிகாரர்கள் தெருவுக்கு ஒருவர், இருவர் என்றுதான் இருந்தார்கள். ஆனால், எப்பொழுது அரசே மது விற்கத் தொடங்கியதோ அப்பொழுதே மது அருந்துவது இழிவான, ஒழுக்கக் கேடான, மானக்கேடான பழக்கம் என்கிற பார்வை மாறி அது சமூகத்தின் பொதுவான பழக்க வழக்கங்களில் ஒன்றாக ஆகி விட்டது. கணக்கெடுத்துப் பார்த்தால் ‘வீட்டுக்கு ஒரு குடிகாரர்’ என்கிற அளவில் தமிழ்நாட்டில் குடிப்போர் எண்ணிக்கை பெருகியிருக்குமோ என்கிற அச்சம் மேலிட்டுள்ள நிலையில்தான், மாநிலம் முழுவதும் குடிக்கத் தொடங்கிவிட்டது என்கிற உச்சக்கட்ட நிலைமையில்தான் இன்று நாம் அனைவரும் இதை மாற்றப் போராடி வருகிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தடாலடியாக உடனடி மதுவிலக்கைக் கொண்டு வந்து மொத்த மது விற்பனையையும் தடை செய்தால் அது குடிப் பழக்கம் உள்ள அனைவரையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும். கள்ளச் சாராயம் காய்ச்சப்படும் இடங்களைத் தேடிச் சென்றோ, வெளி மாநிலங்களுக்குச் சென்றோ மது அருந்துவது எல்லோருக்கும் ஆகக் கூடியதில்லை. ஆகவே, மது அருந்தாததால் கைகளில் நடுக்கம், மன அழுத்தம், படபடப்பு, எரிச்சல், இனம் புரியாத சீற்றம் போன்ற பல பாதிப்புகள் இலட்சக்கணக்கானோரைத் தாக்கும். இஃது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் திரும்பும். குடும்பத் தகராறுகள், அதனால் ஏற்படும் வன்முறை, மன அமைதி இழத்தல் எனத் தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். 

எனவே, எடுத்தேன் கவிழ்த்தேன் என உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவதோ, மதுக்கடைகள், மது ஆலைகள் அனைத்தையும் ஒரு சேர மூடுவதோ பெரிய பாதிப்புகளைத்தான் ஏற்படுத்துமே ஒழிய நன்மை எதையும் விளைவிக்காது. படிப்படியாக, தொலைநோக்குப் பார்வையோடு, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குடிநோயாளி ஒருவரைக் குணப்படுத்த மருத்துவர்கள் எப்படிச் சிறிது சிறிதாக அவர் மதுப் பழக்கத்தைக் குறைத்து உரிய மருத்துவத்தையும் அளித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கத்திலிருந்து அவரை மீட்பார்களோ அப்படித்தான் இதை அணுக வேண்டும்! 

அஃது எப்படி என்பதை இனி பார்ப்போம்! 

முழு மதுவிலக்கை அமல்படுத்தும் முறை 

வெறுமே அரசு மதுக் கடைகளுக்கு மூடுவிழா நடத்துவதோ, மது அருந்துவதற்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவதோ, “இன்று முதல் மது விற்பனை தடை செய்யப்படுகிறது” எனக் கொட்டை எழுத்தில் அறிவித்து விடுவதோ முழுமையான மதுவிலக்கு ஆகி விடாது.
 முதலில் “மது, புகையிலைப் பொருட்கள் முதலான எந்தப் போதைப்பொருளும் இல்லாத மாநிலத்தை உருவாக்குவதே குறிக்கோள்! அதுவே இந்த அரசின் போதைப்பொருள் கொள்கை!” எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு, அதுவே தமிழ்நாடு அரசின் நிலையான கொள்கை முடிவாக நடுவணரசின் ஒன்பதாம் எண் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்! அரசுக்கு வருமானம் குறையும்பொழுது மதுக்கடைகளைத் திறப்பதும், மகளிர் வாக்குத் தேவைப்படும்பொழுது மதுவிலக்கை அமல்படுத்துவதுமாக மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைத்து ஆட்டிப் படைக்கும் ஆட்சி இயந்திரத்தின் அட்டூழியத்துக்கு இதுவே நிலையான முற்றுப்புள்ளியாக இருக்க முடியும்.
 அடுத்ததாக, மதுப் பழக்கத்திலிருந்து மக்களைத் திருத்தும் முன் அரசு தான் திருந்தும் முகமாக, இலக்கு வைத்து மது விற்பனை செய்யும் வழக்கத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் கைவிட வேண்டும்!
 அடுத்து, மது இல்லாத மாநிலத்தை உருவாக்குதல் எனும் நோக்கத்தைச் செயல்படுத்துவதன் முதற்கட்டமாக வழிபாட்டு இடங்கள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டுமல்லாமல் பொது இடங்களில் இயங்கும் எல்லா மதுக் கடைகளையுமே ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்ற வேண்டும்!
 மாநிலத்தில் மொத்தம் எத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள் என்பதை முதலில் மதுக் கடைகள் மூலமாகவே கணக்கெடுத்து, அனைவருக்கும் இலவசப் புகைப்பட அடையாள அட்டை ஒன்றைப் பதிவு எண்ணுடன் வழங்கி அஃது இல்லாமல் யாருக்கும் மது விற்கப்படாது எனச் சட்டம் கொண்டு வர வேண்டும்! இதன் மூலம் அகவையில் (வயதில்) குறைந்தவர்களுக்கு மது விற்கப்படுவதைத் தடுக்கலாம்.
 இவை போக, கல்லூரி மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பறக்கும் படை ஒன்றை அரசு அமைத்துப் பொது இடங்களில் அமைந்துள்ள மதுக் கடைகள், அகவை (வயது) குறைந்தவர்களுக்கு மது விற்கும் கடைகள் எனச் சட்டத்துக்குப் புறம்பான வகைகளில் செயல்படும் அரசு, தனியார் மதுக் கடைகளைப் பூட்டி அவற்றின் உரிமத்தைப் பறிமுதல் செய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்!
 திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிகள் வரும்பொழுது ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு’ என அறிவிப்பு இடம்பெறுவது போல, குடிப் பழக்கத்தை நியாயப்படுத்துகிற வகையிலான உரையாடல்கள், பாடல்கள் இடம்பெற்றால் அவற்றை நீக்கவும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்!
 இவை அனைத்துக்கும் மேலாக, மது எப்படிப்பட்ட தீங்குகளை அருந்துபவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பல வகைகளிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!
 குடியின் தீமைகள் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளக்கி எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘ஒரு மனிதனின் கதை’ எனும் புதினம் ‘தியாகு’ என்கிற பெயரில் பின்னர் திரைப்படமாக வெளிவந்தது. அதை எல்லாத் திரையரங்குகளிலும் மாதம் ஒருமுறை இலவசமாகத் திரையிட ஏற்பாடு செய்யலாம். அதையே தொடராக முன்பு தூர்தர்சன் ஒளிபரப்பி இருந்ததை இப்பொழுது மறு ஒளிபரப்புச் செய்யலாம்.
 குடிப் பழக்கம் குறித்து விழிப்புணர்வுக் குறும்படங்கள் எடுக்க மாணவர்களை ஊக்குவிக்கலாம்.
 புகழ் பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தலைவர்கள் ஆகியோரைக் குடியின் கொடுமை பற்றிப் பேச வைத்துப் படமாக்கித் தொலைக்காட்சிகளின் விளம்பர இடைவேளைகளிலும், திரையரங்குகளில் இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கும்பொழுதும் ஒளிபரப்பலாம்.
 திரையரங்குகளில் படம் திரையிடப்படும் முன்னர் புகையிலைப் பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் படம் திரையிடுவதோடு கூட இனி குடி பற்றியும் விழிப்புணர்வுப் படங்களைத் திரையிடக் கட்டாயச் சட்டம் கொண்டு வரலாம்.
 குடியின் தீமைகளைப் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பாடமாக வைக்கலாம்.
 மதுவிலக்கை அமல்படுத்தக் கோரித் திரண்டு எழுந்திருக்கும் மாணவ ஆற்றலை அதற்காகவே பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் மாணவர்களை வைத்துக் குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை வீடுதோறும் கொண்டு சேர்க்க ஆவன செய்யலாம்.
 இவை தவிர, குடிப் பழக்கத்திலிருந்து மக்களை மீட்க இலவச மருத்துவ முகாம்களை மாநிலம் முழுவதும் அரசு அவ்வப்பொழுது நடத்த வேண்டும்! ஆங்கிலம், சித்தம், ஆயுர்வேதம், ஓமியோபதி என எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடி மீட்பு மருத்துவச் சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும்!
 மேலும், குடிகாரர்களைத் திருத்தும் பொதுமக்களுக்கு ஐயா சசிபெருமாள் அவர்களின் பெயரில் விருது வழங்கிச் சிறப்பிக்கவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்!
 இவற்றுக்கிடையில், அரசு மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மதுக் கடைகளும், ஆலைகளும் மூடப்பட்ட பின்னர் வேலை இழந்து தவிக்காதபடி வேறு ஏதேனும் அரசுத் துறையில் பணியாற்ற அவர்கள் அனைவருக்குமான மாற்று ஏற்பாடுகளும் இப்பொழுதே தொடங்கப்பட வேண்டும்!
 இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மதுக்கான சந்தையை ஒழித்து விட்டு அதன் பிறகு அரசு மதுக் கடைகளையும் ஆலைகளையும் மூட வேண்டும்!
 தனியார் மது உற்பத்தி செய்ய – விற்க, மாநிலத்துக்கு வெளியிலிருந்து மதுவைக் கொண்டு வர ஆகியவற்றுக்கும் நிரந்தரத் தடை போட வேண்டும்!
 இதனால் ஏற்படக்கூடிய கள்ளச் சாராய உற்பத்தியை ஒடுக்க மாநிலக் காவல்துறையினரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்!
இந்தக் கடைசி மூன்று பரிந்துரைகள் எப்பொழுது நிறைவேற்றப்படுகின்றனவோ அப்பொழுதுதான் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதாகப் பொருள்படும்! 

இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக அரசு மது விற்பனையையே நம்பியிருக்காமல் மின்சாரத்துறையை மீட்டெடுப்பதன் மூலமும், வேளாண்மைக்குப் புத்துயிர் கொடுப்பதன் மூலமும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதை விட மாநில உற்பத்தியை ஊக்குவிப்பது, தற்சார்புப் பொருளியல் (self economic) போன்ற சரியான பொருளியல் (economic) கொள்கைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றின் மூலமும் நிலையான வருவாயைப் பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! 

அப்பொழுதுதான் மது இல்லாத, எந்தப் போதைப்பொருளும் இல்லாத தமிழ்நாடு என்கிற சசிபெருமாள் ஐயா அவர்களின் கனவும், போராடும் மாணவர்களின் கோரிக்கையும் நிறைவேறும்! உண்மையான அக்கறையோடு இவற்றைச் செயல்படுத்தினால், நான் முன்பே குறிப்பிட்டது போல அந்தக் கனவு பலிக்கும் நாள் தொலைவில் இல்லை. 

Salute to Martyr Sasiperumal!

(நான் கீற்று இதழில் 0௭.0.௨0௫ அன்று எழுதியது)




© http://agasivapputhamizh.blogspot.com/2015/08/why-not-possible-alcohol-prohibition.html#ixzz3l0eFWDu5

0 comments:

Post a Comment

Kindly post a comment.