விரைவு மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்ய வழங்கப்படும் டிக்கெட்களில் விவரங்கள் தமிழில் அச்சிடாத தால், சாதாரண மக்கள் படித்து புரிந்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ரயில்களில் பயணம் செய்ய வழங்கப்படும் 90 சதவீத டிக்கெட் களில் செல்லும் இடம், நேரம், கட்டண அளவு, பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங் களை ஆங்கிலம் மற்றும் இந்தி யில் கணினி மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்தவர் களால் மட்டுமே கணினி டிக்கெட் டில் உள்ள விவரங்களை முழுமையாக படித்துக் கொள்ள முடியும். ஆனால், பெரும்பான்மையான அளவில் இருக்கும் பிராந்திய மொழி பேசும் மக்களால் புரிந்துக் கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். டிக்கெட் அச்சிடும் போது அந்தந்த பிராந்திய மொழிகளில் அச்சிட்டால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள்.
இது தொடர்பாக ரயில் பயணிகள் பொதுநலச்சங்கத்தின் நிர்வாகி எஸ்.முருகையனிடம் கேட்ட போது, ‘‘சென்னை புறநகர் மின்சார ரயில்களில் படிக்காத எழை, எளிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். டிக்கெட்களில் உள்ள விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருப்பதால், படித்து புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கிறது. எனவே, பெரும் பான்மையான மக்கள் பயன்பெற தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் அச்சிட வேண்டும்’’ என்றார்.
ரயில்வே வணிக விதி என்ன சொல்கிறது?
டிஆர்இயு (தட்ஷிண் ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனி யன்) செயல் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் கேட்ட போது, ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அச்சகங்களில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட் பயன்படுத்தப்படும். அதில், ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் அச்சிடப்பட்டு இருக்கும். இப்படி தான் வழங்க வேண்டும் என்பது ரயில்வேயின் வணிக விதியாகும். இப்போது, 90 சதவீத டிக்கெட்கள் கணினி மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. தமிழ் போன்ற பிராந்திய மொழிகளில் டிக்கெட்களில் அச்சிடாமல் இருப்பது நல்லதல்ல. கணினியில் டிக்கெட் விவரங்களை தமிழ் மொழியில் சேர்த்தாலேயே போதும் சாதாரண மக்களும் பயன்பெற முடியும்’’ என்றார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.