Sunday, April 5, 2015

யாளி - நாவல் - மணிதணிகைகுமார்

யாளி
பதிப்பு ஆண்டு :2010 / 2013
பதிப்பு :முதற் பதிப்பு / இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
தணிகை குமார், மணிtomanithanigai@gmail.com
பதிப்பகம் :கற்பகா இண்டஸ்ட்ரீஸ்
Telephone : 919443177764
விலை :190.00
புத்தகப் பிரிவு :நாவல்
பக்கங்கள் :336
கட்டுமானம் :சாதாரணம்
அளவு - உயரம் :24
அளவு - அகலம் :18
புத்தக அறிமுகம் :
தமிழர்களின் பழம்பெரும் கோவில்களை அலங்கரிக்கும் பிரமாண்ட யாளி பற்றிய ஒரு நாவல்
இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.  இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இத்தகைய விலங்குகளை பின்னணியாகக் கொண்டு உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலக மக்களை பெருமளவில் கவர்ந்தன.  அதன்மூலம் இன்றைய குழந்தைகள் வரை மானிட இனமே தோன்றாத காலத்தில் வாழ்ந்த அந்த விலங்குகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.  ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.  தென் இந்தியாவில் காணப்படும் இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் ஒரு பிரமாண்ட விலங்கின் உருவத்தை சிலைகளாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.  அந்த விலங்குதான் யாளி.
 
நம்மில் மிகச்சிலரே இந்த பெயரை அறிந்திருப்போம். ஆனால் தென்இந்திய கோவில்களை பார்த்தவர்கள் எல்லோரும் அந்த உருவத்தை கண்டிப்பாக பார்த்திருப்போம். குறிப்பாக தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில் கோபுரங்களில் எல்லாம் உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்கலாம்.  அதுதான் யாளியின் முகம். மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற, தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களின் மண்டப தூண்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழுஉயர, முப்பரிமாண யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் எல்லோரும் பார்த்திருப்போம்.  இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.  உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழுஉருவ, முப்பரிமாண சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.  நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழுமனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.  அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
 
ஆயிரக்கணக்கில் சிலைகள் இருந்தும், கண்டுகொள்ளப்படாத நிலையில் இருக்கும் இந்த யாளியை உலக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிதான் இந்த நாவல். யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டையகாலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?  யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன?  யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? என்பதை ஆராயும் ஒரு கற்பனை, அறிவியல், வரலாறு, சமூகம் கலந்த சுவாரசியமான நாவல் இது.
 
நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கலக்ட்டராக ( collector ) பணியாற்றிய ஒரு ஆங்கிலேயே அதிகாரி தன் டைரியில், தான் யாளி என்ற பிரமாண்ட விலங்குகளை உயிரோடு பார்த்ததாக ஒரு தகவலை ரகசியமாக எழுதி வைத்திருக்கிறார்.  இந்த டைரியை நூறு ஆண்டுகளுக்கு பின் படிக்கும் அவரின் கொள்ளு பேரன், யாளி உயிரோடு இருப்பதாக தன் முப்பாட்டன் எழுதி இருப்பது உண்மையா என்பதை தெரிந்து கொள்ள ஒரு இந்திய இளைஞனை துணைக்கு வைத்துக் கொண்டு இந்தியா வருகிறான்.  இந்தியாவின் தெற்கு பகுதியான தமிழகம் வந்ததோடு, அங்கு கோவில்கள் முழுவதும் நிறைந்து இருக்கும் யாளியின் சிலைகளை பார்த்து வியக்கிறான். அது உயிரோடு இருப்பதாக தன் முப்பாட்டனார் குறிப்பிட்ட இடத்தைத் தேடி அலைகிறான். அப்படி தேடுகின்றபோது, யாளி கற்பனை விலங்காகவே மக்களால் கருதப்பட்டு கண்டு கொள்ளப்படாமல் இருப்பதை உணர்கிறான். ஆனால் அவனுடைய அறிவியல் அறிவோ, அது உண்மையான உயிரினம்தான் என்பதை அறிவியல் பூர்வமாக உணர்த்துகிறது.  மேலும் டைனோசர் என்று சொல்லப்படும் உயிரினத்தின் உடலமைப்புக்கும், யாளியின் உடலமைப்புக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதால் யாளிதான் உண்மையில் டைனோசராக இருக்க வேண்டும் என்ற ஒரு அறிய தகவலையும் நமக்கு தருகிறான்.  இறுதியில், தான் தேடிவந்த யாளி உயிரோடு இருக்கும் இடத்தை பார்த்தானா? அந்த இடம் எங்கு உள்ளது? என்பது போன்ற சுவாரசியமான செய்திகளை பண்டைய தமிழர்களின் பூர்வீகமான குமரிக்கண்டத்தோடு தொடர்புப்படுத்தி, சுவரசியமாக சொல்கிறது இந்த நாவல்.
 
கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan

0 comments:

Post a Comment

Kindly post a comment.