Sunday, March 16, 2014

2 செல்போன்களைத் தவிர நேபாள பிரதமருக்கு சொத்து எதுவும் இல்லை

காத்மாண்டு: நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவுக்கு 2 செல்போன்களை தவிர வேறு சொத்துக்கள் எதுவும் இல்லை என்று பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார். நேபாள பிரதமரின் சொத்து விவரம் குறித்த விண்ணப்பத்தை நிரப்பும் போது, தற்போதைய பிரதமர் சுஷில் கொய்ராலாவின் சொத்து குறித்து எதுவும் குறிப்பிடாமல் காலியாக விடப்பட்டது. ஏனெனில், அவருக்கு சொந்தமாக வீடோ அல்லது நிலங்களோ, தனியார் நிறுவன முதலீடுகளோ இல்லை. வங்கி கணக்கு உட்பட கார், மோட்டார் சைக்கிள் கூட அவர் வைத்திருக்கவில்லை என்று நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவின் மூத்த செயலாளர் பாசந்தா கவுதம் நேற்று காத்மாண்டுவில் தெரிவித்தார். 

கொய்ராலாவுக்கு சொந்தமாக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உட்பட எந்த சொத்தும் இல்லை. அவருக்கு சொந்தமாக 2 செல்போன்கள் மட்டுமே உள்ளன. அவற்றை அவரது சொத்தாக கருத முடியாது. இதனால் பிரதமரின் சொத்து குறித்த விண்ணப்பத்தில் சொத்து குறித்து எதையும் குறிப்பிடாமல், அவரது தனிப்பட்ட விவரங்களை மட்டும் நிரப்புவது என்று முடிவு செய்திருக்கிறோம் என்று கவுதம் கூறினார். கடந்த மாதம் பிரதமரின் இல்லத்துக்கு 75 வயதான நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா வரும் வரை, நேபாள காங்கிரஸ் தலைவராக இருந்த போது காத்மாண்டு அருகே உள்ள புறநகர் பகுதியில் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினகரன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.