மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்
மாணவர் இல்லத்தில் நிறுவப்பட்ட
"அருண் 100' சூரிய மின்சக்தி அமைப்பு.சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவதன் மூலம் சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்த முடியும் என ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கௌதமானந்தர் கூறினார்.
மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இல்லத்தின் மேல்தளத்தில் புதியதாக நிறுவப்பட்ட "அருண் 100' எனப்படும் சூரியசக்தி அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், நீராவி மூலம் சமையல் தயாரிப்பது குறித்தும் மும்பை க்ளிக் சோலார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கௌதமானந்தர் கூறியது: "அருண் என்றால் சூரியோதயம்' என்று அர்த்தம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கவும், எரிபொருள் சிக்கனம் கருதியும் அருண் 100 சூரியசக்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை சூரிய ஒளிக்கீற்றுக்களை எந்த திசையில் இருந்தும் 99.5 சதவீதம் கிரகித்துக்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் 600 கிலோ நீராவியை தினமும் உற்பத்தி செய்து 3 ஆயிரத்து 500 முதல் 4000 மாணவர்களுக்கு தேவையான சாம்பார், சாதம், பருப்பு ஆகியவற்றை தயார் செய்ய முடியும்.
சூரியமின்சக்தி அமைப்பை நிறுவுவதன் மூலம் எரிவாயு பயன்பாட்டை மிச்சப்படுத்த முடியும். மேலும் தினமும் 2 கேஸ் சிலிண்டர்களின் தேவையை குறைக்கிறது. இதுபோன்ற சூரியசக்தி அமைப்புக்கு ரூ.33 லட்சம் செலவாகும். அதில் 30 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும். சூரிய மின்சக்தி அமைப்புக்கு மிகக் குறைந்த அளவிலான மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது. என்றார் கௌதமானந்தர்.
நிகழ்ச்சியில் மாணவர் இல்லத்தின் செயலர் ஸ்வாமி சத்யானந்தாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி-15-10-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.