Tuesday, October 8, 2013

தமிழில் எழுத்துச் சீரமைப்புக்கு வா.செ.குழந்தைசாமியின் இறுவட்டு !

தமிழில் எழுத்துச் சீரமைப்பு - இறுவட்டு



முனைவர் வா.செ.குழந்தைசாமி



முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தை மிகச் சிறப்பாக இறுவட்டு வடிவில் ஒலி ஒளிக்காட்சியில் விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் வாழுகிற தமிழர்கள் தமிழை எளிமையாகக் கற்க வேண்டும். இதற்கு 247 எழுத்துகள் தடையாக இருக்குமானால் - பயன்பாடு கருதி இதனை மாற்றிக் கொள்ளலாம் என்ற கருத்தினை இந்த இறுவட்டு விளக்கியுள்ளது. இந்தக் குறுவட்டு, தமிழ் எப்படி பலநூறு ஆண்டுகளாக எழுத்துவடிவத்தில் மாற்றம் பெற்றுள்ளது என்பதையும் காட்டுகிறது. தந்தை பெரியார் அவர்கள் தான் நடத்தி வந்த பத்திரிகைகளில் இக்கருத்தினை எழுதியோடு மட்டுமல்லாமல் விடாப்பிடியாக லை, அய், அய்யா என்பனவற்றைத் தன் இதழ்களில் தொடர்ந்து எழுதியும் வந்தார். தமிழக அரசு ஒரு காலகட்டத்தில் - இந்த - லை - எழுத்து மாற்றத்தைச் செய்தது.

தமிழில் உகர ஊகார வரிசை எழுத்துகள் புதிய வடிவம் பெறுவதால் நினைவில் நிற்பது சிரமமாக இருக்கிறது. எனவே இதனைக் குறியீடுகளில் குறிப்பிட எளிமையாகும் என்கிற கருத்தினை இது காட்டுகிறது. மேலும் இகர ஈகார வரிசைக்கான குறியீடுகளையும் வழக்காமாக இல்லாமல் இடம் மாற்றி எழுதவும் குறிப்பிட்டுள்ளது. ஆக 30 எழுத்துகளையும், 9 குறியீடுகளையும் கொண்டு தமிழை எழுதிவிடலாம் என்கிறது இது.

தந்தை பெரியார் அவர்களின் காலத்தில் அவரது சிந்தனையில் உதித்த இக்கருத்துகளை - இன்றைய அனைவருக்கும் கல்வி இயக்கக் காலகட்டத்தில் - வ.செ.குழந்தைசாமி முன்வைத்துள்ளார்.

இந்த இறுவட்டு முன்வைக்கிற செய்தியை நமது பட்டறிவில் கூர்ந்து பார்ப்போம்.

தமிழ்க் கற்றலில் மாணவர்களுக்கு ஏற்படும் பொதுவான இடர்பாடுகள்....

1. தமிழ்க் கற்றலில் உகர ஊகார வரிசை எழுத்துகள் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுத்துகின்றன.
2. தமிழ்க் கற்றலில் ஒற்றெழுத்துகளை நினைவில் வைப்பது சிரமமாக இருக்கிறது.
3. தமிழ்க் கற்றலில் கொ, கோ, கெள வரிசை எழுத்துகள் நினைவில் நிற்கவில்லை.

இப்படி மாணவர்களிடம் கண்டறிந்த இடர்பாடுகளுக்கெல்லாம் மாணவர்களிடமே - ஆய்வு செய்து - அவர்கள் கற்பதற்கான எளிய முறையை - 32 அட்டைகளில் உள்ளடக்கி உள்ளோம்.

1. எளிய முறையில் தமிழில் படித்தல் திறனை வளர்த்துவதற்கான இந்த 32 அட்டைகளில் உகர ஊகார ஒளகார வரிசை எழுத்துகள் கற்றலில் இறுதியாக வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. இந்த எழுத்துகளில் மொத்தமாக 20 எழுத்துகளுக்குமேல் பயன்பாட்டில் இல்லை. எனவே அதைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

2. ஒற்றெழுத்துகளை ட, ட் - ப, ப் - ம, ம் என அட்டைகளில் அறிமுகம் செய்வதால் அவர்களது ஒற்றெழுத்து இடர்பாடானது நீக்கப்படுகிறது.

3. குறியீடுகளை அறிமுகம் செய்து, அதனைச் செய்தித் தாளில் மீள்பார்வை செய்து, அதற்கான ஒலிப்புமுறையை மாணவர்களுக்குள் பதியவைத்து, பிறகு குறியீடுகளை எழுத்துகளோடு பொருத்தி ஒலிக்கப் பயிற்சி தருவதால் மூன்றாவது இடர்பாடும் நீங்கி விடுகிறது.

ஆகவே தற்பொழுது தமிழ்க் கற்றல் என்பது எளிமையாக - இரண்டே திங்களில் தமிழகத்திலுள்ள தமிழ் பேசும் மக்களால் (தமிழ் சூழலில்) செய்ய முடியும். வெளிநாட்டுச் சூழலில் (தமிழ் பேசுகிற சூழல் இல்லாத நிலையில்) சொற்களை - அசையும் பட அகராதி வழி அறிமுகம் செய்து, சூழலிலுள்ள பேச்சுவழி தமிழை அறிமுகம் செய்தால் - தமிழை எளிமையாகக் கற்பித்து விடலாம். இவ்வகையான தமிழ்க் கற்பித்தலுக்குத் தமிழம் வலை - ஒவ்வொரு படியாக வெற்றி கண்டுள்ளது. விரும்புகிற பார்வையாளர்கள் தொடர்பு கொண்டு பயன் அடையலாம். எனவே எழுத்துகளின் வடிவங்களை மாற்றுவது என்பது குழப்பம் உண்டாக்கும் செயலே.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,

0 comments:

Post a Comment

Kindly post a comment.