திருவள்ளூர் மாவட்டத்தில் பல தபால் நிலையங்கள் தற்போது மூடப்பட்டு வருவதால், சிறுசேமிப்பில் கணக்கு வைத்திருக்கும் முதியோர், பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைமை தபால் நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, பேரம்பாக்கம், திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கிளைத் தபால் நிலையங்களும், 12-க்கும் மேற்பட்ட துணைத் தபால் நிலையங்களும் இயங்கி வந்தன.
இந்த தபால் நிலையங்களில் கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள முதியவர்கள், பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோர் சிறு சேமிப்புக் கணக்குகளை வைத்திருந்தனர்.
அவர்கள் தங்களுக்கு அன்றாடம் கிடைக்கப்பெறும் பணத்தில் சிறு தொகையை தபால் நிலையங்களில் சேமிப்பாக போட்டு வருகின்றனர்.வங்கியைக் காட்டிலும், தபால் நிலையங்களில் பணப் பரிமாற்றம் செய்வதில் சிரமம் குறைவாக இருப்பதாலும், கணக்கில் இருக்கும் குறைந்தத் தொகையையும் வேண்டிய நேரத்தில் எடுத்துக் கொள்ளவும் வசதி இருப்பதாலும் கிராமத்தினர் பெரும்பாலும் தபால் நிலையங்களை நாடி வருகின்றனர்.
தபால் நிலையங்கள் மூடல்...
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி போன்ற பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. அவ்வாறு மூடப்படும் தபால் நிலையங்களின் கணக்குகள், வேறு பகுதியில் உள்ள தபால் நிலையங்களுக்கு மாற்றப்படுகின்றன.
உதாரணமாக திருவள்ளூரில் பஜார் வீதி, நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டு, அதன் கணக்குகள் அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மக்கள் அவதி
இதன் காரணமாக, இப்பகுதிகளில் உள்ள முதியோர், பெண்கள் ஆகியோர் பஸ் அல்லது ஆட்டோக்களில் தலைமை தபால் நிலையத்துக்குச் சென்று ரூ.50, ரூ.100-ஐ கட்டி வருகின்றனர்.
சிறிய தொகையைக் கட்டுவதற்கு பணம் செலவு செய்து, நீண்டதூரம் சென்று வர வேண்டியுள்ளதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பலர் தங்களது கணக்குகளை முடித்து வருகின்றனர்.
இது குறித்து தலைமை தபால் நிலைய அலுவலர் கூறியது:
நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளில் ஒரே ஒரு துணைத் தபால் நிலையம் மட்டுமே இருக்க வேண்டும்.
அந்தக் காலத்தில் ஒரே பகுதியில் தொடங்கப்பட்ட பல துணைத் தபால் நிலையங்கள் தற்போது மூடப்பட்டு வருகின்றன.
இதுவரை 6 துணைத் தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்றார் அவர்.
தினமணி -15-10-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.