சென்னை பட்டினப்பாக்கத்தில் 560 அடுக்குமாடிகள் கொண்ட 6 மாடி
குடியிருப்புகள் கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு வீட்டு
வசதி வாரியம் திட்டமிட்டுள்ளது. 1501 சதுர அடி கொண்ட நவீன சொகுசு வீடு
ஒன்றின் விலை ரூ.1 கோடியே 99 லட்சத்து 2 ஆயிரம் ஆகும்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் 1963-ம் ஆண்டு 25 ஏக்கர் நிலப்பரப்பில் 1300
வீடுகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்கான வாடகைக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்ததால் அங்கு குடியிருந்த அரசு ஊழியர்களை காலி
செய்யும்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கேட்டுக் கொண்டது.
பெரும்பாலானவர்கள் வீட்டைக் காலி செய்துவிட்டனர். சிலர் உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் மீதியிருந்தவர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களுக்கு அந்த இடத்திலேயே வாடகை குடியிருப்புகள் கட்டித் தரப்படும்
என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து கடந்த 2006-ம் ஆண்டு அந்த வீடுகள் முழுவதும் இடிக்கப்பட்டன. 25
ஏக்கர் நிலப்பரப்பில் பாதி இடத்தில் அரசு ஊழியர்கள் வாடகை
குடியிருப்புகளும், மீதி இடத்தில் பன்னடுக்கு குடியிருப்புகளும் கட்டி
பொதுமக்களுக்கு விற்கப்படும் என்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
அறிவித்தது. இருந்தாலும் பல ஆண்டுகளாக அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதனால்
அந்தப் பகுதி புதர் மண்டி காடுபோல காட்சியளிக்கிறது.
புதிய குடியிருப்பில் வீடு விலை ரூ.1.99 கோடி
இந்த நிலையில், பட்டினப் பாக்கத்தில் சுயநிதித் திட்டத்தின் கீழ் உயர்
வருவாய்ப் பிரிவினருக்காக 6 மாடிகளைக் கொண்ட 560 அடுக்குமாடி
குடியிருப்புகளைக் கட்டி விற்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்
பட்டினப்பாக்கம் கோட்டம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மூன்று படுக்கையறைகளைக் கொண்ட 180 வீடுகள் 1501 சதுர அடியில்
கட்டப்படுகின்றன. இந்த வீடு ஒன்றின் விலை ரூ.1 கோடியே 99 லட்சத்து 2
ஆயிரம். அதுபோல 1491 சதுர அடியில் 180 வீடுகள் கட்டப்படுகின்றன. இதன் விலை
ரூ.1 கோடியே 97 லட்சத்து 72 ஆயிரம்.
இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட 100 வீடுகள் 960 சதுர அடியில்
கட்டப்படுகின்றன. ஒரு வீட்டின் விலை ரூ.1 கோடியே 27 லட்சத்து 33 ஆயிரம்.
அதுபோல 916 சதுர அடியில் 100 வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த வீடு ஒன்றின்
விலை ரூ.1 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம். குடியிருப்பு விற்பனை விலை
தற்காலிகமானதுதான். இறுதி விற்பனை விலை கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்
அறிவிக்கப்படும்.
வாகன நிறுத்துமிடத்திற்குக் கூடுதல் தொகை
கூரையுடன்கூடிய வாகனம் நிறுத்துமிடத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும்,
திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்திற்கு ரூ.1 லட்சமும் கூடுதலாக செலுத்த
வேண்டும்.
விண்ணப்பத்தை, அக்டோபர் 9-ந் தேதியில் இருந்து நவம்பர் 6-ம் தேதி வரை
அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னை அண்ணாசாலை,
நந்தனம் தபால் நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,
பட்டினப்பாக்கம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் (தொலைபேசி எண்: 044
24350821) பெற்றுக் கொள்ளலாம்.
முன்வைப்புத் தொகை ரூ.5 லட்சம்
இதற்கான விண்ணப்பத் தொகை ரூ.570. தபாலில் வாங்குவதற்கு ரூ.670. விண்ணப்பப்
படிவத்துடன் முன்வைப்புத் தொகை ரூ.5 லட்சத்திற்கான டிமாண்ட் டிராப்ட்
இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். செயற்பொறியாளர், பட்டினப்பாக்கம் கோட்டம்,
சென்னை என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட்
எடுக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நவம்பர் 7-ம் தேதி மாலை 5
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகள் குலுக்கல்
முறையில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்படும்.
தி இந்து, 01-10-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.