Saturday, August 24, 2013

'ஞானத்தாழிசை' விளக்கம் -! -சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி. :(முதற் பாடல் )



"நான் ஆத்மாவே" என்று உணரச் செய்வதே சித்தநெறியின் சாரம்.

"நான் உண்மையில் இந்த சரீரம் அன்று;
இந்த மனமும் அன்று;
என்னைப் பொறுத்தவரையில் பாவமும் இல்லை; புன்ணியமும் இல்லை.
அவ்விதமாயின் உண்மையில் நான் யார் ?
அகண்ட சச்சிதானந்தமாய் என்றும் எதிலும் நிலைபெற்று விளங்கும் ஆத்மாவே நான்.
இந்த ஆத்மாவே எல்லாச் சரீரங்களிலும் தன்னைத் தோற்றுவிக்கிறது'
இதனை உணர்ந்தவனே ஜீவன் முக்தன்.
இத்தகைய ஜீவன் முக்தர்களாகிய 

ஞானசித்தர்களுள் ஒருவரே மாணிக்கவாசகப் பெருமான்.


இம்மகானின் அருள் வாக்காக வெளிவந்த "ஞானத்தாழிசை" என்னும்
பன்னிரு பாடல்களும் மேற்கூறிய சித்தநெறி என்னும் யோக சார்புள்ள
கருத்துக்களையே வலியுறுத்தி விளக்குகின்றன.

'ஞானத்தாழிசை' விளக்கம் - ! -சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி. 

"சுழியாகிய முனைகண்டபின் உற்றாருற வற்றாய்
குதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வாழியாகிய துறைகண்ட பின் அனுட்டானுமுமற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர்கண்டபின் உயரர்ச்சனை யற்றாய்
மெய்நீரிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறினை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலையுற்றவர் அலையற்றிரு மனமே"

பரம்பொருள் சர்வசராசரங்களிலும் ஊடுருவி நின்றபோதிலும் இறைவனை அவரவர்களுக்குடைய இதயத்தில்தான் அடையமுடியும். பசுவின் உடல் முழுவதும் பால் பரவியிருந்தாலும் அதன் மடியின் வழியாகத்தான் அப்பாலைப் பெற முடியும். அதைப்போல் எங்கும் ஊடுருவி நிற்கும் பரம்பொருளை அவரவர்களுடைய இதயமாகின்ற மடியின் மூலமாகத்தான் அடையமுடியும்.

"இதே கருத்தினைத் தேடிக்கண்டு கொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடிக் கண்டு கொண்டேன்  "பிரம்மாவாலும் விஷ்ணுவாலும் தேடிக் கண்டு கொள்ள முடியாத சிவதரிசனத்தைப் பல கோவில்தலங்களில் தேடி அலைந்தும் காணமுடியாமல், கடைசியில் என் இதயத்தில் கண்டு கொண்டேன்" என்று உள்ளம் உருகிப் பாடுகிறார், அப்பர் பெருமான்.

கழுமுனையாகிய இதயத்தில் புலங்களும் மனதும் முற்றும் அடங்க்கினால் எல்லா உறவுகளும் அற்று சூதுவாது, பொய் போன்ற செய்கைகள் தாமே விலகி விடுகின்றன. கழுமுனையில் மலரும் சந்திரப் பூவைக் கண்டபின் இவ்வுலகத்து மலர்களும் அர்ச்சனையும் பொருளற்றதாகிவிடுகின்றன. உண்மை நெறி கண்டபின் பல சாத்திரங்க்கள் கற்பதும் அனுஷ்டானங்க்கள் செய்வதும் பல மந்திரங்கள் செபிப்பதும் விட்டு அஜபா ஜெபத்தில் மனம் லயித்துத் தானே சிவமாய் விளங்குகிறான்.

"வாசலீரைந்தில் மயங்க்கிய வாயுவை ஈசனிருக்கும் வாசலில் ஏற்று " என்கிறார் ஒளவை. அதாவது இந்திரியங்கள்  ( மெய், வாய், கண், மூக்கு, செவி ) வழியாக மயங்கிச் சலித்து விரயமாகும் ஜீவசக்தியாகியன்ற வாயுவைநடராசனின் திருக்கூத்தாகின்ற நடனம் எபொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புருவவாசலில் ஏற்றச் சொல்கின்றாள். அதனால்தான் "அடைத்திட்ட வாசலின்மேல் மனம் வைத்துப் படைத்தவன் தன்னைப் பார்" என்றால்.அடைத்துக் கிடக்கும் வாசலாகின்ற புருவ மையத்திலுள்ள சுழுமுனையில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனைப் பார்க்க வேண்டும் என்கிறாள் ஒளவை.

திருமூலரோ "நட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்டமுமில்லை, மனைக்கும் ( உடம்பு ) அழிவில்லை, ஓட்டமுமில்லை, உணர்வில்லை, தானில்லை, தேட்டமுமில்லை, சிவன் அவனாமே" என்கிறார். எனவே, மனம் அடங்க்க வேண்டிய இடம் நாசி நுனி நடுவேதான் என்பது புலனாகின்றது. இதனையே "கையறவிலாத நடுக்கண் புருவப்பூட்டு அதைக் கண்டு கனிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு" எங்கின்றார் இராமலிங்க சுவாமிகள்.

 "கோணாமக் சுழுமுனையில் மனதை வைத்துக்
குருபாதம் இருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாமல் ஒருநினைவாய்க் காக்கும்போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே"
"நடக்காதே சினங்க்காதே உறங்கிடாதே
சுழுமுனை விட்டுப்பின் வாங்காதே"

என அகத்தியரும் கூறுவது இங்கு உணர்ந்து இன்புறத்தக்கது. இவற்றால் மனம் அடங்க வேண்டிய இடம் நாசி நுனி நடுதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எம் மத்தினருக்கும் இது சம்மதமே..

வேறு மதத்தினரும்  புருவ மையத்தைத் தொட்டுத்தான் சலாம் செய்கின்றனர். தன்னை அறியாமலேயே கையும் மனமும் அங்க்கு செல்கின்றது. சிலுவையாய்ச் சேவிப்பதும் செய்கின்றனர்.நெற்றிக்குப் பொட்டு வைப்பதுவும் கூட இறைவனின் இருப்பிடத்தைக் காட்டுவதற்கேயாம்..

" பத்தாவது வாசல் ஒன்று உண்டு" அதுதான் புருவ மையம். அதுவே திருச்சிற்றம்பலம்.

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த ஞானத்தாழிசை ( 6-ஆம் பதிப்பு )
விளக்கவுரை :- சுவாமி சங்கரானந்தா, ஐந்தருவி

சங்கராஸ்ரமம்
ஐந்தருவி
குற்றாலம் ( P.O. )
திருநெல்வேலி மாவட்டம்
627 802
------------------------------------
தொலைபெசி :- 04633-291166
---------------------------------------

0 comments:

Post a Comment

Kindly post a comment.