Tuesday, December 25, 2012

குடிபோதையில் வாகனம் ஓட்ட்டியோர் கடந்த 5 ஆண்டுகளில் 65 ஆயிரம் பேர் சாவு !

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக விடுமுறை கால நீதிமன்றம் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படவுள்ளது. 

இந்நிலையில் இந்த விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக சமூக ஆர்வலர் ஏ. நாராயணன் திங்கள்கிழமை ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட பின்னர் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகவும் அதிகமாகி விட்டன. கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 15 ஆயிரத்து 409 பேர் சாலை விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் 65 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி மரணமடைந்துள்ளனர்.

குடி போதையில் வாகனங்களை ஓட்டுவதும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதுமே பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணம் என்று அரசின் கொள்கை விளக்கக் குறிப்பிலேயே கூறப்பட்டுள்ளது.

எனினும் குடிபோதையிலும், அதிவேகமாகவும் வாகனங்களை இயக்குவோரைக் கட்டுப்படுத்திட காவல் துறையினரும், போக்குவரத்துத் துறையினரும் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெறும் கிறிஸ்துமஸ் பண்டிகைத் தொடங்கி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வரை குடிபோதையில் வாகனங்களை இயக்குவோரைத் தடுத்திடும் வகையில் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

குறிப்பாக ஒருவர் மது அருந்தியுள்ளாரா என்பதை அவரது சுவாசத்தின் மூலம் கண்டறியும் கருவி மற்றும் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்துள்ளதா என்பதைக் கண்டறியும் கருவி ஆகியவற்றை அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களின் வாயில்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் நிறுவிட வேண்டும்.

இந்தக் கருவிகள் மூலம் சோதனைகளை நடத்தி, மது அருந்தியுள்ளவர்களை வாகனங்கள் ஓட்டாமல் தடுத்து நிறுத்திட வேண்டும்.

அதேபோல் சுயமாக வாகனங்களை ஓட்டி வந்துள்ளவர்களுக்கு மதுபான விநியோகம் செய்யக் கூடாது என்று அனைத்து பார்கள், விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் நாராயணன் கோரியுள்ளார்.

நன்றி;- 25-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.