Monday, December 24, 2012

சீனாவில் 2300 கி.மீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் அதிவேக ரெயில் !

 

சீனாவில் 2300 கி.மீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும் அதிவேக ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 739.5 கி.மீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் சென்றடைகிறது. ஆனால் சீனாவில் 2,300 கி.மீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் சென்றடையும் அதிவேக விரைவு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து தென்பகுதியில் உள்ள வர்த்தக நகரான குவாங்சூ வரை இயக்கப்படுகிறது. அதற்காக விசேஷ அதிவேக ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக நீளமான இந்த ரெயில் பாதையில் நேற்று முன்தினம் இந்த அதிவேக ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் இது இயக்கப்பட்டது. ஆனால் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு புல்லட் ரெயில் விபத்துக்குள்ளானது. அதில் 40 பேர் பலியாகினர். அதனால் அதிவேக ரெயில்களில் பயணம் செய்ய மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த ரெயிலின் பாதுகாப்பான பயணத்துக்கு சீனா ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

வழக்கமாக பெய்ஜிங்- குவாங்சூ நகரங்களுக்கு இடையேயான ரெயில் பயணம் 20 மணி நேரமாகும். தற்போது இந்த அதிவேக ரெயிலின் மூலம் பயணம் 8 மணி நேரமாக குறைகிறது.

இந்த ரெயில் பயணம் வருகிற 26-ந்தேதி தொடங்க உள்ளது. அதற்குள் பயணம் செய்ய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

நன்றி :மாலைமலர், 24-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.