Monday, November 26, 2012

கூத்துக்கலையின் நடவு வயலாகப் புரிசை - கவிஞர் ஆரிசன்., தீக்கதிர்.


புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான்


மண்ணின் மணத்தோடு அரிதாரம் பூசி அடவு தப்பாமல் ஆடி மக்களுக்கு விடிய விடிய கதை சொல்லும் கூத்துக்கலை இன் னும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது, வாழ வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆண்டுதோறும் திருவிழாவாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தி வரும் பாரம்பரியமிக்க மண்தான் புரிசைக் கிராமத்து மண்.

புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றமும், தஞ்சை தெற்கு மண்டல கலாச்சார பண்பாட்டு மையமும் இணைந்து,




கலைமாமணி கண் ணப்ப தம்பிரான் நூற்றாண்டு நிறைவு விழா

 மற்றும் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவாக 9வது தியேட்டர் திருவிழா 2012 ,

கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா

ஆகிய முப்பெரும் விழாக்கள் அண்மையில் புரிசையில் நடைபெற்றது.

துவக்க நாளில் பயிற்சியாளர் எம். பழனி,

ஏரியல் ஆக்ரோபட் எனும் தொங்கும் ஒற்றைத்துணியில் தெருக் கூத்துப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சிகள்  மக்கள் கண்களுக்குப் பெருவிருந்தாக அமைந்தது.

பின்னர் கௌரி சம்பந்தன் குழுவினரின் தமிழிசைப் பாடல் நிகழ்வோடு கூத்துத்திரு விழா துவங்கியது.

வைகறை கோவிந்தன் குழுவினரின் கிராமிய இசைப்பாடல்களைத் தொடர்ந்து கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கண்ணப்பகாசி தலைமை தாங்கினார். மூத்த தெருக்கூத்துக் கலைஞர் வி. ரத்தினம் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதுதினை பத்திரிகை யாளர் மயிலைபாலு வழங்கி கௌரவித்தார்.

‘நான் சின்ன வயசுல கூத்துப் பார்க்க எங்க கிராமத்துல பாய் எடுத்துக் கொண்டு போய் கூத்து நடக்கும் இடம் முன்பாக விரித்தமர்ந்து  விடிய விடியக் கூத்துப் பார்த்த அதே நினைவை இந்த மண்ணிலும் பார்க்க முடிகிறது’ என்று தன் நினைவுகளை மயிலைபாலு பகிர்ந்து கொண்டார்.

சிறப்புரையாற்றிய பத்திரிகையாளர் ஞாநி ‘ என் சொந்த ஊர் ஆர்க்காடுக்கு அருகே உள்ள நல்லூர் கிராமம் தான் . நான் என் சொந்த கிராமத்துக்குப் போனால் கூட ஏற்படாத  மகிழ்ச்சி இந்தப் புரிசை மண்ணில் நிற்கும் போது ஏற்படுகிறது. கண்ணப்ப தம்பிரான் வாழ்ந்த பூமியில் நிற்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்றார்.

நிகழ்வில் முனைவர் செ. இரவீந்திரன், தமுஎகச திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் கவிஞர் ஆரிசன், ஊராட்சி மன்ற தலைவர் லதா லட்சுமணன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஜூஜூபீ, மௌனக் குறம், தெனாலி ராமன், ரேணுகாம்பாள் சரித்திரம் ஆகிய நாடகங்களும் தெருக்கூத்து நிகழ்வுகளும் இடம் பெற்றன.

மறுநாள் 21ம் நூற்றாண்டில் தமிழ் நாட கம் தெருக்கூத்து மற்றும் நவீன தியேட்டர் குறித்த கருத்தரங்கம் முனைவர் செ. இரவீந்தி ரன் தலைமையில் நடைபெற்றது. இதன் ஒருங்கிணைப்பாளர் பணியினை முனைவர் மு. இராமசாமி ,நிஜ நாடக இயக்கம், சிறப்புறச் செய்தார்.

கருத்தரங்கில் ஞாநி, ‘இயக்குநர் பரிக்ஷா நாடக்குழு’, பிரளயன் ,சென்னை கலைக் குழு,, டாக்டர் பார்த்திபராஜா, டாக்டர் கே. பழனி, டாக்டர்
அ. அறிவுநம்பி ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆய்வினைச் சமர்ப்பித்தனர்.

பின்னர் இரவில் தற்காப்புக்கலை நிகழ்வு துவங்கியது. இரா. இராமலிங்கம் வந்தவாசி, தமுஎகச உதவிப் பொதுச் செயலாளர் எஸ். கருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

‘வட்டம்’ பரிக்ஷா குழுவின் நாடகம் தொடர்ந்து காபிரியேல் தார்ஷியா மார்கோஸின் -‘பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனி தன்’ நாடகம் நடைபெற்றது. பின்னர் மின்னல் ஒளி சிவ பூஜை - தெருக்கூத்தோடு அன்றைய நிகழ்வு நிறைவுபெற்றது.

இறுதி நாளில் ஜெயசந்திர ஹாஷ்மியின் மௌன மொழி, ஆர். பச்சமுத்துவின் மூன்றாம் தமிழ், செந்தில்ராமின் கிரியா ஆகிய குறும் படங்கள் திரையிடப்பட்டன.

பி. ஹேமநாதன் ,உதவி இயக்குநர் கலை பண்பாட்டுமையம், காஞ்சிபுரம்) வாழ்த்துரை வழங்க கிராமிய இசை , ஒயிலாட்டம், தப்பாட் டம் மற்றும் வேலூர் சாரல் கலைக்குழுவின் அரங்கதிர்ந்த ஆடலும் , பாடலும் ,இடி முழக்கம் போன்றும், பறை இசையுடனும் விழா களைகட்டியது.

இறுதியில் ஸ்ரீவள்ளி திருமணம், மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் மூலம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வினை இரா. லோக நாதன் ஒருங்கிணைத்தார். கண்ணப்ப சம்பந் தன் நன்றி கூறினார்.

அடவு சொல்லித் தரும் மண்ணாக கூத்துக் கலையின் நடவு வயலாக புரிசை எப்போதும் இருப்பது, தமிழகத்திற்கு மட்டு மல்ல இந்தியாவுக்கும் பெருமையே.                                                                                                                               

0 comments:

Post a Comment

Kindly post a comment.