Tuesday, August 14, 2012

சென்னை வலைப்பதிவர்கள் கூட்டம் ஞானாலயா பக்கமும் பார்க்கட்டும்!



புதுக்கோட்டை ஞானலயாவுக்கு சில உதவிகள் வேண்டும். ஏற்கெனெவே ஞானாலயா குறித்த விவரங்கள், அதற்கு தற்சமயம் தேவைப் படுகிற உதவிகள் குறித்து கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிற வேலை ஆரம்பமாகி இருக்கிறது. கழுகு குழுமத்தில் இந்த செய்தி பகிரப் பட்ட பிறகு, எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் ஞானாலயா பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல்கள் உதவிக் கரங்களாக மாறுவதில் நாம் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

இந்த சுட்டியில் கொஞ்சம் விவரங்கள், அதன் ஏப்ரல், மே மாத நிலவரங்களை அறிந்து கொள்கிற விதத்தில்  பின்னூட்டங்களில் காணக் கிடைக்கும்.


இந்த கூகிள் ப்ளஸ்சில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக.தற்போதைய நிலவரம் வரை காணக் கிடைக்கும். ஞானாலயா என்று கூகிளிட்டுத் தேடினால்,எத்தனை பேர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் கிடைக்கும்.

அடுத்து செய்ய வேண்டிய பணிகளாக .....

முதலாவதாக, அங்கே இருக்கும் அரிய சேகரத்தை மின்னாக்கம் செய்கிற பணி அதற்குத்தேவையான தன்னார்வலர்களைப் புதுக்கோட்டையில் கண்டறிவது, அவர்களை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கு மின்னாக்கம் செய்வதில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கும், சில தொழில்நுட்ப உதவிகளுக்கும் உள்ளூரிலேயே தகுந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சி தொடங்கி இருக்கிறது. ஏற்கெனெவே உதவுவதாக வாக்களித்த சில அமைப்புக்கள், தனிநபர்களிடமிருந்து வேறு தகவல்கள் எதுவும் இல்லை.ஆக, அவைகளை வெறும் பேச்சு என்று ஒதுக்கித்தள்ளி விட்டு, அடுத்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கத் தொடங்கியாக வேண்டி இருக்கிறது.

இரண்டாவதாக சில ஸ்கேனர்கள், கணினிகள்  இவைகள் இப்போது வேலையை செய்வதற்கு என்று ஆரம்பித்தாலும், பின்னால் ஒரு செர்வர் ப்ளஸ் நோடுகளாக மாற்றி, படிப்பதற்கு, ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்குமான சாதனங்களாகவும் வைத்துக் கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு அதற்கான  நிதி ஆதாரங்களைத் திரட்டுவது.

ரெடிமேடாகக் கிடைக்கும் ஸ்கேனர்களை விட, தேவைக்குத் தகுந்த ஸ்கேனர்களை உள்ளூரிலேயே வடிவமைத்துக் கொள்வது, செலவு சிக்கனப் படுத்துவதாக மட்டுமல்ல, செயல் வேகத்தை அதிகரிக்கக் கூடிய விதத்திலும் இருக்கும்.இதை வடிவமைத்துத் தருவதற்குண்டான தொழில்நுட்பம் இங்கேயே இருக்கும்போது, அதைப்பயன் படுத்திக் கொள்வது பொருத்தமாக இருக்கும் இல்லையா!இந்த சுட்டியை பாருங்கள்!

CES 2011 - Make your own ebooks with Book Saver   இதே போல இங்கேயே வடிவமைத்துக் கொள்ளலாம்!

மூன்றாவதாக, பெருகி வரும் சேகரங்களைப் பாதுகாப்பதற்காக, மாடியில் தொள்ளாயிரம் சதுர அடியில் உத்தேசித்திருக்கும் கட்டிட விரிவாக்கத்துக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது. நல்லெண்ணம் கொண்ட ஒரு நண்பர் அச்சாரமாகக் கொடுத்திருக்கும் ஒருலட்சரூபாயுடன், இந்த வேலை ஆரம்பமாகி விட்டது.சுமார் எட்டரை-ஒன்பது லட்சம் மதிப்பீட்டிலான இந்த வேலை தொய்வில்லாமல் நடப்பதற்கு, உதவிக்கரங்கள், நேரத்துடன் நீண்டாக வேண்டும்.

நான்காவதாக, திரு பா.கிருஷ்ணமூர்த்தியிடம் இருக்கும் புத்தகங்கள், புத்தக ஆசிரியர்கள், பதிப்பகங்கள் குறித்த தகவல்களை ஆவணப் படுத்துவது

இதுவரை ஞானாலயாவைக் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் விதத்தில் ஒரு வலைப்பூ தொடங்கப் பட்டிருக்கிறது.

http://gnanalaya-tamil.blogspot.in/   இந்த வலைப்பக்கங்களை புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். ஒரு நல்லபணிக்கு உங்களாலானவரை உதவுங்கள்!
விரைவில் வீடியோ பாட்காஸ்ட், ஆடியோ பாட்காஸ்டுடன், இந்த வலைத் தளத்தை விரிவு படுத்துவதற்காண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா தன்னிடமிருக்கும் அபூர்வமான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான, ஆவணப் படுத்துவதற்கான முன்னோட்டமிது.

வயதான காலத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்களைத் தொந்தரவு செய்யாமல், ஒன்று அல்லது இரண்டு முழுநேர ஊழியர்கள், நூலகப்பராமரிப்பு செலவுகளை ஈடு செய்கிற விதத்தில் ஒரு கார்பஸ் உருவாக்குவது என்று ஒவ்வொரு படியாக வேலைகளைத் தொடங்கினால் அதுகடந்த ஐம்பத்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்து வருகிற பணிக்கு உறுதுணையாக, அடுத்து வரும் தலைமுறைக்கும் பயன்படுவதாக இருக்கும்.

புதுக்கோட்டையை சேர்ந்த பதிவர்களிடம்  அவர்கள் முன்கைஎடுத்து செய்யக் கூடிய நல்ல ஒரு ஆரம்பமாகவும் இது இருக்கும் என்று விடுக்கப்பட்ட வேண்டுகோளின் மீது இதுவரை எந்த முன்னேற்றமுமில்லை. ஞானாலயாவுக்காக2007 இல் உருவாக்கப்பட்ட வலைத்தளம் வேலை செய்யவுமில்லை.

இப்போது புதுகைப்பதிவர்களை நம்பிக் காத்திருப்பதை விட  ஞானாலயா தம்பதியினரின் மாணாக்கர்கள், நலம் விரும்புகிறவர்களைக்  கொண்டே சில ஆக்க பூர்வமான வேலைகளை செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன

ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, நிதியுதவி முக்கியம் தான்! ஆனால் வெறும் பணத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடிய பணி இல்லை இது! மனித உழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிற பணி இது! புத்தகத்தை நேசிக்கிறவர்கள்,  மரபுகள், பண்பாடு, வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருப்பவர்கள், கருத்துத் திருடர்களிடமிருந்து, உண்மையைப்பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள் என்று பலவிதமான ஆர்வலர்களும் ஒன்று கூடித் தேரிழுக்கும் உன்னதமான பணி இது.

தொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

http://www.gnanalaya-tamil.com/2012/07/blog-post.html







0 comments:

Post a Comment

Kindly post a comment.