Saturday, July 7, 2012

முத்துத்தாண்டவர் (1525 - 1600)


MONDAY, MAY 23, 2011


நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன். பாரதிபயிலகம் உதவி 

செய்தது. நன்றியோ நன்றி.

http://bharathipayilagam.blogspot.in

முத்துத்தாண்டவர் (1525 - 1600)

தமிழிசை மூவரில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் முத்துத்தாண்டவர். மற்ற இருவர் அருணாசல கவிராயர் (1712 - 1779) மற்றவர் மாரிமுத்தா பிள்ளை (1717 - 1787). இவர்கள் மூவரையும் தமிழிசை மூவர் என்று போற்றி வருகிறோம். சீர்காழியில் ஆண்டுதோறும் இம்மூவரின் இசை விழா நடைபெற்று வருகிறது.

முத்துத்தாண்டவரை கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்றுகூடச் சொல்லலாம், காரணம் இவர் உருவாக்கிய சங்கீத முறையில்தான் கிருதிகளில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பகுதிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.

இவர் தஞ்சை மாவட்டத்தில் சீர்காழியில் வசித்தார். இவருடைய பங்களிப்பு கர்நாடக சங்கீதத்துக்கு மிக அதிகமென்றாலும் கூட இவருடைய பல கிருதிகளில் காலவெள்ளத்தில் காணாமல் போய்விட்டன. இவரும் ஒரு காலகட்டம் வரை மறக்கப்பட்டிருந்தார். முத்துத்தாண்டவர் பல அழகிய பதங்களை இயற்றியிருக்கிறார். பரதநாட்டியத்தில் பாடி ஆடுவதற்கு ஏற்ப பல சிறிய பாடல்களையும் இவர் இயற்றித் தந்திருக்கிறார். இவருடைய பதங்கள் இன்றும்கூட பாடி ஆடிவருவதை நாம் காணலாம். குறிப்பாக இவருடைய "தெருவில் வாரானோ?" எனும் கமாஸ் ராகப் பாடலைச் சொல்லலாம்.

முத்துத்தாண்டவர் சீர்காழியில் ஆலயங்களில் பணிபுரியும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் வம்சத்தில் உதித்தவர். தற்காலத்தில் இவர்களை இசை வேளாளர்கள் என்று அழைக்கிறார்கள். இவருடைய இயற்பெயர் 'தாண்டவன்' என்பது. இந்தப் பெயர் தில்லையில் நடனமிடும் நடராஜப் பெருமானைக் குறிப்பது. இவருக்கு சின்ன வயதில் ஏற்பட்ட உடல் உபாதையின் காரணமாக இவரது வளர்ச்சி குன்றி, பார்ப்பதற்கு நன்றாக இருக்க மாட்டார். இதனால் இவர் பிறருடன் பழகுவதை நிறுத்தி விட்டார். குடும்பத்தினரின் தொழிலான நாதஸ்வரத்திலும் இவர் பயிற்சி பெறவில்லை. மற்றவர்களும் இவரை ஒதுக்கியே வைத்திருந்தனர். இவருடைய வியாதியினால் இவர் உடலில் தோல் பகுதிகள் மாற்றம் பெற்று பார்க்க அருவெறுப்பாக இருந்தது.

இவருடன் பழகிய ஒரே ஜீவன் சிவபாக்கியம் என்பவர்தான். இவர் தினந்தோறும் சிவபெருமான் குறித்த பாடல்களை இவருக்குப் பாடிக் காட்டுவார். அதையும் மற்றவர்கள் விரும்பவில்லை, குறைகூறினார்கள். இவரை வீட்டிலிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள். இவர் தன்னுடைய சகா பாடுவதையும் ஆடுவதையும் போய் தினமும் பார்க்கத் தொடங்கினார். சிவபாக்கியம் பாடிய பாடல்கள் இவருக்கு மிகவும் பிடித்திருந்தன. இவர் அவற்றை விரும்பிக் கேட்கத் தொடங்கினார். தானும் அதுபோல பாடல்களை இயற்றத் தொடங்கினார். ஆலயத்துக்கு வழிபாடு செய்ய வருகின்றவர்கள் இறைவனைப் புகழ்ந்து கூறும் சொற்களைக் கூர்ந்து கவனித்து அவற்றைத் தன் பாடல்களில் வைத்துப் பாடத் தொடங்கினார். அப்படியே தினமும் ஆலயத்தில் இவர் பாடி வழிபாடு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

தொடர்ந்து இப்படிச் செய்துகொண்டு பல பதங்களை இயற்றிப் பாடினார். 'தெருவில் வாரோனோ' பதம் மிகவும் புகழ் பெற்றுவிட்டது. பல நடனக் கலைஞர்கள் இந்தப் பாடலைப் பாடி ஆடினர். வயிற்றுப் பாட்டுக்கு ஆலயத்தின் பிரசாதம் கிடைத்து வந்தது. ஆனாலும் இவரது உடல்நிலை மோசமடைந்து வந்தது. நடக்க முடியாமல் தவழ்ந்து வரும் நிலைக்குப் போனது நிலைமை. அப்படி ஒரு நாள் தவழ்ந்து வந்து மயக்கமாகி கீழே விழுந்தார். எழுந்திருக்க முடியவில்லை. கோயில் அர்ச்சகர்கள் இவரை அப்படியே விட்டுவிட்டு விளக்குகளை அணைத்துவிட்டு பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். இரவில் இவருக்கு நினைவு திரும்பி எழுந்து பார்த்தார், ஒரே இருட்டு. பயமாக இருந்தது. இறைவனை அழைத்து வாய்விட்டு கதறி அழுதார். அப்போது கோயில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவருடைய சின்ன பெண் அங்கு தோன்றினாள். அவள் கையில் இவர் சாப்பிட உணவு கொண்டு வந்திருந்தாள். அந்தப் பெண் உணவை இவருக்குக் கொடுத்து ஆறுதல் கூறினாள். அப்போது அந்தப் பெண் கூறினாள், நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் அங்கு தினமும் நடராஜப் பெருமானை தரிசனம் செய்து வாருங்கள். அந்தக் கோயிலில் நீங்கள் முதன்முதலாகக் காதால் கேட்கும் சொல் எதுவோ அந்தச் சொல்லை முதலாக வைத்து இறைவன் சந்நிதியில் புதிது புதிதாகப் பாடலை இயற்றிப் பாடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

மறுநாள் அர்ச்சகர் கதவைத் திறந்து பார்த்தபோது அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. உடலில் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த தாண்டவருக்கு முழுவதுமாக குணமாகி சாதாரணமாக இருப்பதைப் பார்த்தார். இதென்ன ஆச்சரியம். முதல் நாள் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இவருக்கு எப்படி ஒரே இரவில் குணமாயிற்று? எல்லாம் இறைவன் செயல். அவனது திருவிளையாடல் என்று தாண்டவருக்கு "முத்துத் தாண்டவர்" என்று பெயரிட்டு அழைத்தார். முத்துத்தாண்டவருக்கு அப்போதுதான் ஒரு உண்மை புலனாயிற்று. தான் முன்பும், முதல் நாள் இரவும் பார்த்த அர்ச்சகரின் மகள் என்று நினைத்திருந்த அந்தச் சிறுபெண் வேறு யாருமல்ல, தான் தினமும் மனம் உருகி வணங்கி பாடிவரும் உமையம்மைதான் அவள் என்று புரிந்து கொண்டாள்.

அடடா! அம்மையின் கருணைதான் என்னே. லோகநாயகியான அன்னைத் தன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி தேடிவந்து உணவளித்து, உய்ய வழிகாண்பித்துச் சென்றாளே என்று மனம் உருகினார். நேரில் கண்டபோது அன்னையை யாரென்று அறியாமல் போனேனே. என்னே என் அறியாமை என்று மனம் வெதும்பினார்.

அன்னை பணித்தபடி உடனே கிளம்பி அவர் தில்லை பொன்னம்பலம் சென்றடைந்தார். அங்கு ஆலயத்தில் அவர் கேட்ட முதல் சொல் 'பூலோக கைலாயகிரி சிதம்பரம்". அதனை முதலடியாகக் கொண்டு அவருடைய முதல் பாடல் ஆரம்பமானது. இப்படி தினந்தினம் சிதம்பரம் செல்வதும் புத்தம் புதிய பாடல்கள் தோன்றுவதாகவும் நாட்கள் போயின. அப்படி ஒரு நாள் அவர் சிதம்பரம் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளத்தை கவனிக்காமல் நடராஜப் பெருமானையும் அன்னை சிவகாமியையும் மனதில் எண்ணியபடி நடந்தார், கொள்ளிட வெள்ளநீர் பிரிந்து அவருக்கு வழிவிட்டது.

இந்த நிலையில் ஒரு நாள் தாண்டவருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அன்று கோயிலில் எவர் சொன்ன எந்த சொல்லும் முதன்முதலாக அவர் காதில் விழவில்லை. அவர் மனம் படபடத்தது. எண்ணம் அலைபாய்ந்தது. இறைவா இது என்ன சோதனை. மனிதர் சொல்லும் எந்தச் சொல்லும் என் செவிகளில் விழவில்லையே, என்ன செய்வேன், என்ன சொல்லி உன் புகழ் பாடுவேன். நெஞ்சம் படபடத்த ஒலிமட்டும்தான் அவர் செவிகளில் விழுந்தன. கதறி அழுதார், நெஞ்சே, ஒலி எழுப்பாதே, "பேசாதே நெஞ்சமே!" என்று சொல்லி அழுதார். அதுவே அன்று அவர் சொல்லி, அவர் செவிகளால் கேட்ட முதற் சொல். அந்தச் சொல் கொண்டே அன்றைய பாடல் பிறந்தது. பிறர் சொன்ன சொல்லை முதன்முதலாகக் கேட்டு பாட்டு இயற்றியது போயி, இப்போது தானே சொல்லி பாட்டு பிறக்கலாயிற்று.

முத்துத்தாண்டவரின் வாழ்க்கை இப்படியே, தில்லை நடராஜனும், சிவகாமி அம்மையும் அவர்கள் எதிரில் தினமும் பாடும் வழக்கமும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர் வயதும் ஓடிக்கொண்டிருந்தது. வயது 80 ஆயிற்று. ஒரு நாள் தில்லை நடராஜப் பெருமான் சந்நிதியில் ஓர் பெரும் ஒளிப்பிழம்பு தோன்றியது. அந்தப் பிழம்பு உருவாகி, மறையும்போது அந்த ஒளியிலேயே முத்துத்தாண்டவரும் மறைந்து போனார். அன்று பூச நட்சத்திரம். நடராஜர் ஆனந்த தாண்டவம் புரிந்து இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த நாள். முத்துத்தாண்டவரும் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைந்தார்.

முத்துதாண்டவர் இயற்றியருளிய பல பாடல்களில் எஞ்சியவை மிகச்சிலவே. காலத்தால் அழிந்துபோனவை தவிர கிடைத்தவை மிகச் சில. அப்படிக் கிடைத்த பாடல்கள் அறுபது என்கின்றனர். 25 பதங்களும் கிடைத்திருக்கின்றன. அவருடைய பாடல்கள் இப்போதெல்லாம் அடிக்கடி மேடைகளில் பாடப்படுகின்றன. அதிலும் தமிழிசை கோலோச்சத் தொடங்கியபின் தமிழ் மூவர் என்று இவர்கள் பாடல்களுக்கெல்லாம் தனிமரியாதை கிடைத்து இசைக்கப்படுகின்றன. அதிகமாகப் பாடப்படும் சில பாடல்களாவன, "அருமருந்தொன்று தனி மருந்திது" எனும் மோகனம் அல்லது காம்போஜி ராகப் பாடல், "பேசாதே நெஞ்சமே" எனும் தோடி ராகப் பாடல், தன்யாசி அல்லது காம்போஜியில் பாடப்படும் "காணாமல் வீணிலே", கமாஸ் ராகப் பாடல் "தெருவில் வாரானோ", கீரவாணி ராகத்தில் "உனை நம்பினேன் ஐயா", "ஈசனே கோடி சூர்ய பிரகாசனே" எனும் நளினகாந்தி ராகப் பாடல், "சேவிக்க வேண்டுமையா" எனும் அந்தோளிகா ராக பாடல், "இன்னும் ஒரு தரம்" எனும் சிம்ஹேந்திரமத்யமம் ராகப் பாடல், இன்னும் ஒரு சுருட்டி ராகப் பாடல் இவைகளைச் சொல்லலாம். தமிழும் தமிழிசையும் இருக்கும் வரை தமிழிசை மூவரின் பெருமையும், இறையருள் பெற்ற முத்துத்தாண்டவர் பாடல்களும் என்றும் நிலைத்திருக்கும்.


தில்லைவிடங்கன் மாரிமுத்தாபிள்ளை, சீர்காழி அருணாசலக் கவிராயர், சீர்காழி முத்துத்தாண்டவர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.