Monday, March 4, 2013

ஆண்டிப்பட்டியில் 3000 ஆண்டு பழமையான சங்ககாலக் குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியில் 3000 ஆண்டு பழமையான சங்ககாலக் குகை ஓவியங்கள், வாழ்வியல் தடங்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

 பழனி அருகே ஆண்டிபட்டி மலைப்பகுதியின் மேற்கே உள்ள ஒரு குகையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆர்வலர்கள் பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட போது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககால ஓவியங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

10க்கும் மேற்பட்ட தொகுதிகளாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன..  சுண்ணாம்பு, மூலிகை மற்றும் மரப்பிசின் கொண்டு வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் பல நிறம் மங்கியுள்ளது.  காதலையும், வீரத்தையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த சங்ககாலத் தமிழ் மக்களின் வாழ்வியல் அற்புதங்களை இந்த ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன.  ஒரு ஓவியத்தில் விழாச்சடங்கிற்காக ஏராளமான பெண்கள் கூட்டமாகப் பானைகளில் தண்ணீர் கொண்டு செல்வது போலவும், மற்றொரு ஓவியத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் கூட்டமாகக் கைகோர்த்து மகிழ்ச்சியுடன் நடனமாடுவது போலவும் வரையப்பட்டுள்ளது.

இன்றளவும் இதுபோன்ற நடனங்களை பளியர், புலையர் போன்ற பழங்குடி மக்கள் ஆடுவது வழக்கமாகும்.  மற்றொரு ஓவியத் தொகுப்பில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் திருவிழாவுக்காக ஒரு ஆட்டைப் பலியிட அழைத்துச் செல்வது வடிக்கப்பட்டுள்ளது.

 மற்றொரு ஓவியத்தொகுப்பு படக்கதை போல வரையப்பட்டுள்ளது.  அதில், அகழி ஒன்றில் யானை சிக்கிக் கொள்வது, பின்னர் யானையை ஆட்களைக் கொண்டு பழக்குவது,

பின்னர் அதில் மன்னர் அம்பாரி மீது அமர்ந்து செல்வது, பாதுகாப்பு வீரர்கள் சூழ போருக்கு புறப்பட்டு செல்வது என்பது போல வரையப்பட்டுள்ளது.  இவை தவிர யானை, புலி, முள்ளம்பன்றி, ஆண், பெண் தனித்தனி உருவங்கள், வேட்டை ஓவியங்கள் என பலவும் சிதறலாக வரையப்பட்டுள்ளன..

 சில ஓவியங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன..  இப்பகுதியில் சங்ககால மனிதர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவர்கள் பயன்படுத்திய ஓடுகள் கிடைத்துள்ளன.  நகக்குறி ஓடுகள், கழுத்துப்பகுதியில் வரையப்பட்ட ஓடுகள், கறுப்பு,சிவப்பு ஓடுகள், பளபளப்பான செம்மைநிற ஓடுகள் என பலவும் உள்ளது. 

இந்தக் குகை 2 ஆயிரம் ஆண்டு முதல் 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய இடைப்பட்ட காலத்தில் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது எனத் தெரிவித்தனர்                                                                                                                                       

நன்றி :-தினமணி, 04-03-2013.

0 comments:

Post a Comment

Kindly post a comment.