Sunday, September 4, 2011

மக்கள் நலனுக்கானவை தமிழக இலவசத் திட்டங்கள் நிறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக அரசின் இலவசத் திட்டங்களை நிறுத்த முடியாது' என, உச்சநீதிமன்றம் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டது. இலவச திட்டங்கள், மக்கள் நலனுக்கானவை என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில், இலவச திட்டங்கள் வழங்குவதை எதிர்த்து, வழக்கறிஞர் சுப்ரமணிய பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், "தமிழக அரசு சார்பில், ஏராளமான இலவச திட்டங்கள் வழங்கப்படுகின்றன. வரும் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் மற்றும் பெண்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவசங்களை வழங்குவதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


இம்மனு, நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகாத்கி ஆஜரானார். தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

சமூகத்தின் அடித்தட்டில் உள்ளவர்களின் நலனுக்காகவும், அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தவும், அவர்களுக்கு சமூக நீதி கிடைக்கவும், இந்த திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக, வழிகாட்டும் குறிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது. இலவசங்கள் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை அடையாளம் காண்பதற்காகவும், இவற்றை வினியோகிப்பது தொடர்பாகவும், வழிகாட்டும் குறிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.தேர்தலில் பங்கேற்கும் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும், தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு, தங்களின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த உரிமை உள்ளது.ஒவ்வொரு அரசியல் கட்சியும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்து, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் நமக்கு சாதகமாக இருக்கும் என்பதை பார்த்து, மக்கள் ஓட்டளிக்கின்றனர்.

இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எனவே, தேர்தல் அறிக்கை வெளியிடுவதைத் தவறு என கூற முடியாது.தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள், ஆட்சி அமைக்கின்றன. எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர் என்பதற்காக, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்துவதை, தவறு எனக் கூற முடியாது.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, தகுதியானோருக்கு, தமிழக அரசு சார்பில் இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசங்கள் வழங்கப்படும்.இவ்வாறு தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, "இலவசத் திட்டங்களை அமல்படுத்துவதில், பாகுபாடு காட்டப்படாது என, மாநில அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் இலவசம் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, லேப்-டாப் மற்றம் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகிய இலவசங்கள் வழங்குவதற்கு தடை விதிக்க முடியாது.

இலவசங்கள் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்து, அடுத்த விசாரணையில் முடிவு செய்யப்படும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கனவே, சென்னை ஐகோர்ட்டில், இலவச "டிவி'க்களை முந்தைய அரசு வழங்கியதில் அரசுக்கு ஏற்பட்ட, 3,687 கோடி ரூபாய் இழப்பைச் சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

அந்த வழக்கைத் தொடர்ந்த, வழக்கறிஞர் சுப்ரமணிய பாலாஜி, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் இலவசங்களை எதிர்த்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.ஏற்கனவே ஐகோர்ட்டில் இலவசம் குறித்த மனு இருப்பதால், அம்மனு குறித்த விஷயங்களையும் சுப்ரீம் கோர்ட்டிற்கு மாற்ற வழக்கறிஞர்கள் கோரியதை நீதிபதிகள் அனுமதித்து, தேர்தல் கமிஷன், கணக்கு தணிக்கை அலுவலகம் , மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.