Sunday, February 3, 2013

” இதுவும் கடந்து போகும்” - கெளதம புத்தரின் வெற்றி மந்திரம்


புத்தர் படத்தினை தந்த வலைப்பூ

எத்தனையோ செடிகளின் , மரங்களின் விதைகளை எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் விதைத்துச் சென்று கொண்டிருக்கும் காற்றைப்போல, நல்லுரைகளை ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களிடம் வழங்கிக் கொண்டிருக்கும், போதி மரத்தடியில் ஞானம் பெற்ற கெளதம புத்தர், தங்கள் ஊருக்கு வெளியே இன்று மாலை போதனை செய்வதற்கு வருவதாகவும், அனைவரும் வந்து புத்தரின் உபதேசத்தைப் பெற்றுச் செல்லவும்,  என்று அவரது சீடர்கள் சொல்லிச் சென்றதால் அவ்வூரில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புத்தரைப் பரிசோதிக்க நினைத்தார்கள். எப்படி ? அந்த ஊரில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன், கடினமாக உழைத்தும் பணம் சேர்க்க முடியாதவன், பரம்பரைப் பணக்காரன், திடீர்ப் பணக்காரன், பெற்ற தாயைக் கவனிக்காதவன், தன்னுடைய அழகை மட்டும் பெரிதென நினைத்த பெண், என்று பலதரப்பட்ட மனிதர்களுக்கும் தீர்வு தேவைப்பட்டது. அதனால் இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள். புத்தரிடம் தாங்கள் என்ன பேசவேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு, அவரைச் சந்திக்கச் சென்றனர்.

ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வந்துவிட்டதைக் கண்டதும் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது. தொடர்ந்து புத்தரைநோக்கி, “புத்தரே!, நாங்கள் உங்களைப் போன்ற ஞானிகள் பலரச் சந்தித்தும், அவர்களது அறிவுரைகளைக் கேட்டும் விட்டோம். ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்குப் பிரச்சனை இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவதொரு பிரச்சனை இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி, மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். தெவையற்ற பிரசங்கம் எல்லாம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில், சிறியதாக இருக்கவேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க மந்திரத்தைச் சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக் கொள்கிறோம்“ என்றது, அக்குரல்.

மெளனப் புன்னகையுடன், புத்தர், “இதுவும் கடந்து போகும்”  என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அக்கணமே, அந்தக் கூட்டம், ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் புதிய மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.
நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையோடு சுழன்று கொண்டிருந்த இளைஞனுக்குத் தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை “இதுவும் கடந்து போகும்”  கண்டிப்பாகத் தனது இன்றைய நிலைமை மாறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. ”இந்த மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து, இன்னமும் எனக்கு வேண்டிய சக்தியைப் பெற்றுக் கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.ய நீண்டகால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும்; இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது; இது மிகவும் நல்ல மந்திரம்” என்று கூறிச் சென்றான், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

“இந்தப் பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான், பணக்காரனாக இருந்தவன்.

அடுத்து இருந்த அழகான பெண், “என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது; என்பதை இம்மந்திரம் எனக்கும் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

கடைசியாகத் தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி போகும்போது, “இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்; மரணம் வரை உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துஇவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்ற நம்பிக்கையுடன் சென்றார்.

எத்தனையோ மனிதர்களுக்கு நம்பிக்கையூட்டிய  மந்திரம், நமது வாழ்விலும் இனி ஒளி ஏற்றும். “இதுவும் கடந்து போகும்” என்பதை உறுதியுடன் நம்புவோம். தோல்வியையே  தொடர்ந்து சந்திப்பவர்கள், நீண்டநாள் நோயோடிருப்பவர்கள், சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்போர், செல்லவேண்டிய திசை தெரியாமல் இருப்போர் அனைவரும் இந்த மந்திரத்தை மனதிற் கொள்வோம். வெற்றி நிச்சயம்.

 இல.செ.கந்தசாமியின்,  தன்னம்பிக்கை, சுய முன்னேற்ற மாத இதழ், கடந்த 25 ஆண்டுகளாகக் ோயத்ூரிலிரந்தொடர்ந்த வெளிவந்துகொண்டிருக்கிறது.  அதன், ஜனவரிம்2013, இதழில்,  திருமதி.சித்ரகலா எழுதியுள்ள கட்டுரையினை நன்றியுடன் வலைப்பூவில் பதிவு செய்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

www.thannambikkai.com 
                   
e-mail :- editor@thannambikkai.com
.

0 comments:

Post a Comment

Kindly post a comment.