Wednesday, August 31, 2016

மக்கள் மனதை மாற்றிய போஸ்டர்: 'ஜோக்கர்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி -இந்து



"ஜோக்கர்' படத்தின் போஸ்டர் மூலமாக வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக சேர்ந்திருப்பதால் தயாரிப்பாளர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ராஜூமுருகன் இயக்கத்தில் சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'ஜோக்கர்'. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

குறைந்த திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து திரையரங்குகள் அதிகப்படுத்தப்பட்டன. பல்வேறு வகையில் இப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.

ரஜினி, தனுஷ் பாராட்டு

இப்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த், தயாரிப்பாளர் பிரபுவுக்கு தொலைபேசியில் தன்னுடைய வாழ்த்தைத் தெரிவித்தார். ''ஜோக்கர் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள், ரொம்ப சந்தோஷம். இந்த மாதிரியான கதையம்சம் உள்ள படத்தை தயாரிக்க தைரியம் வேண்டும்'' என்று ரஜினிகாந்த் தெரிவித்ததாக தயாரிப்பாளர் பிரபு தெரிவித்தார்.

'ஜோக்கர்' பார்த்துவிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குநர்,நடிகர்,இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர்.தயவு செய்து பாருங்கள்" என்று தெரிவித்திருந்தார். மேலும், இயக்குநர் ராஜூமுருகன், சோமசுந்தரம் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

வங்கிக் கணக்கில் வருகிறது பணம்!

'ஜோக்கர்' படத்தை திருட்டு விசிடி-யில் பார்ப்பவர்கள், அதற்கான நியாயமான தொகையை இந்த வங்கி கணக்கில் செலுத்தும்படி வங்கி கணக்கைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தினார்கள். அப்போஸ்டருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

எவ்வளவு பணம் வந்தது என்பது குறித்து தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்ட போது, "அந்த போஸ்டரால் நம்மை கிண்டல் செய்வார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால், உண்மையில் நாங்கள் இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. தற்போது வரை ரூ. 5 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கி கணக்கில் வந்திருக்கிறது. மக்கள் அனைவருமே இந்தப் படம் தோற்றுவிடக் கூடாது என்று நினைத்து பணத்தைச் செலுத்துவது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது போல மக்கள் அனுப்பும் பணத்தை வைத்தே ஒரு கழிப்பறையை கட்டிவிடுவோம்" என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் பிரபு.

0 comments:

Post a Comment

Kindly post a comment.